
கூட்டாட்சிக்கு வேட்டு!
ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்; இது, நம் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சி. மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி அதிகாரம் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்பதற்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
சஞ்சய் ராவத்
ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா உத்தவ் அணி
காங்கிரசை கைவிட்டனர்!
காங்கிரஸ் கட்சி தோற்கும் போதெல்லாம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் கிளப்புகிறது. இந்த விவகாரத்தில் முன்பு பொதுமக்கள் காங்கிரசை கைவிட்டனர். தற்போது அதன் கூட்டணி கட்சியினரான திரிணமுல் மற்றும் சமாஜ்வாதி கட்சியினரே கைவிட்டு விட்டனர்.
ஜோதிராதித்ய சிந்தியா
மத்திய அமைச்சர், பா.ஜ.,
தப்பிப்பதற்காக நேரு பெயர்!
மத்திய அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சி எம்.பி.,க்களிடம், அம்பேத்கர் அம்பேத்கர் என முழங்குவதற்கு பதில் கடவுள் பெயரை கூறினால் புண்ணியமாவது கிட்டும் என கூறி, அம்பேத்கரை அவமதித்து உள்ளார். அது மட்டுமின்றி விலைவாசி உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, நேரு பெயரை பா.ஜ.,வினர் உச்சரிக்கின்றனர்.
ஜெய்ராம் ரமேஷ்
ராஜ்யசபா எம்.பி., - காங்கிரஸ்

