
கோவில் புனிதத்தை காப்போம்! திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்படம் செய்த விவகாரத்தை மறைப்பது, பக்தர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் செயல். புனிதப்பொருளான லட்டுவில் கலப்படம் இருப்பதற்கான ஆய்வு முடிவுகளை ஏன் வெளியிடவில்லை என மக்கள் கேள்வி எழுப்புவர். ஒவ்வொரு கோவிலின் புனிதத்தையும் என் அரசு காப்பாற்றும். சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்
சபாநாயகரிடம் ஆலோசனை! பிரதமர் மோடி பற்றி அவதுாறு கருத்து தெரிவித்த ராகுலுக்கு எதிராக பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்துள்ளதால், அரசு சார்பில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படாது. இதை, நெறிமுறைக் குழுவுக்கு அனுப்புவதா அல்லது நேரடியாக லோக்சபாவுக்கு கொண்டு வருவதா என்பது குறித்து சபாநாயகரிடம் ஆலோசிப்போம். கிரண் ரிஜிஜு மத்திய அமைச்சர், பா.ஜ.,
2,700 நக்சல்கள் சரண்! நக்சல் ஒழிப்பை உறுதி செய்ய நாங்கள் முழு பலத்துடன் செயலாற்றி வருகிறோம். 2024 ஜனவரி முதல் சத்தீஸ்கரில், 532 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2,004 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்; 2,700 பேர் சரணடைந்துள்ளனர். பஸ்தரின் அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் , குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சியை விரிவுபடுத்துவோம். விஜய் சர்மா சத்தீஸ்கர் துணை முதல்வர், பா.ஜ.,

