ADDED : மே 04, 2025 03:52 AM
ராய்ப்பூர்: நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினர் அவ்வப்போது தேடுதல் வேட்டை நடத்தி, நக்சல்களை ஒடுக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், ராய்ப்பூரில் இருந்து 180 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த போலீசார் மற்றும் சத்தீஸ்கர் போலீசார் இணைந்து, அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்த இடத்தில் இருந்து துப்பாக்கி, வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மற்ற நக்சல்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தாண்டில் மட்டும் சத்தீஸ்கரில் இதுவரை 145 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.