'ஆன்லைன்' பக்க வடிவு புத்தகங்கள் வெளியிட்டது என்.சி.இ.ஆர்.டி.,
'ஆன்லைன்' பக்க வடிவு புத்தகங்கள் வெளியிட்டது என்.சி.இ.ஆர்.டி.,
UPDATED : ஜூலை 25, 2025 03:56 PM
ADDED : ஜூலை 25, 2025 01:12 AM

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் கிடைக்காத நிலையில், அவற்றின் 'ஆன்லைன்' கோப்புகள், தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. யாராலும் மாற்ற முடியாத, பி.டி.எப்., வடிவில் அவை உள்ளன.
புதிய கல்வி கொள்கையின்படி, இந்தாண்டு, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கான ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் இதுவரை புத்தகங்கள் விற்பனைக்கு வராததால், 'பிரிட்ஜ் கோர்ஸ்' எனும் இணைப்பு பாடங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், கடைகளில் புத்தகங்கள் கிடைக்காததால், மாணவர்கள் அவதியடைவது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது, என்.சி.இ.ஆர்.டி., இணையதளத்தின், https://ncert.nic.in/textbook.php என்ற இணைப்பு பக்கத்தில், புத்தகங்களின் பி.டி.எப்., கோப்புகள் பதிவேற்றப்பட்டுள்ளன.
இவற்றை, ஆசிரியர்களும், மாணவர்களும் இலவசமாக பதிவிறக்கி அச்சிட்டுக் கொள்ளலாம். இவற்றை, வணிக ரீதியில் அச்சிட முடியாதபடி, 'வாட்டர் மார்க்' எனும் மங்கலான எழுத்துருவில், 'என்.சி.இ.ஆர்.டி., டெக்ஸ்ட் புக்' என, ஒவ்வொரு பக்கத்திலும் சாய்வாக பொறிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பல பள்ளிகளில், அங்கீகரிக்கப்படாத முகவர்கள் வாயிலாக புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன. அதேநேரம், அமேசான் இணையதளத்தின் வாயிலாக புத்தகங்களை வாங்கலாம் என்றும் என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.
- நமது நிருபர் -