நீங்க ஓரடி; நாங்க 2 அடி: முதல்வர் ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் பதில்
நீங்க ஓரடி; நாங்க 2 அடி: முதல்வர் ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் பதில்
ADDED : ஆக 20, 2024 06:48 AM

புதுடில்லி: தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது என முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
ஸ்டாலின் கடிதம்
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு குறைந்த அளவிலான நிதியை மத்திய அரசு ஒதுக்கியிருப்பதாகக் கூறி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
குற்றச்சாட்டு
'' புதிய பாதைகளுக்கு இடைக்கால ஒதுக்கீடாக ரூ.976.1 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட்டில் வெறும் ரூ.301.3 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இரட்டை பாதை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.285 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது'' என கடிதத்தில் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.
ரூ.6,362 கோடி
இதற்கு பதில் அளித்து, சமூகவலைதளத்தில் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கை: பின்வரும் உண்மைகளை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட 7 மடங்கு அதிகம். நமது அரசியலமைப்பு சட்டத்தின் படி, நிலம் என்பது மாநிலப் பொருளாகும்.
2,749 ஹெக்டேர் நிலம்
நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் அரசு எங்களுக்கு ஆதரவளித்தால் மட்டுமே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும். 2,749 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்ட நிலையில், இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் தலையீட்டை நாடுகிறோம். நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டிற்கு நாங்கள் இரண்டு அடி எடுத்து வைப்போம் என்று உறுதியளிக்கிறோம். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

