பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் சேர்க்க 400 'சீட்'களை வெல்ல வேண்டும்: அசாம் முதல்வர்
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் சேர்க்க 400 'சீட்'களை வெல்ல வேண்டும்: அசாம் முதல்வர்
UPDATED : மே 15, 2024 11:56 AM
ADDED : மே 15, 2024 09:47 AM

புதுடில்லி: ''லோக்சபா தேர்தலில் பா.ஜ., 400 இடங்களில் வெற்றிப்பெற்றால், மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியிலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்திலும் கோயில் கட்டப்படும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு, பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுடன் சேர்க்கப்படும்'' என அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது: பா.ஜ., 300 இடங்களில் வெற்றிப் பெற்றபோது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது. இம்முறை 400 இடங்களை கைப்பற்றினால் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியிலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்திலும் கோயில் கட்டப்படும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு, பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுடன் சேர்க்கப்படும். காங்கிரஸ் ஆட்சியின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக பார்லிமென்டில் எந்த விவாதமும் நடைபெறவில்லை. அது உண்மையில் நம்முடையது.
தற்போது, அங்கு போராட்டம் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இடஒதுக்கீட்டிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பா.ஜ., அரசு செயல்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், கோதுமை மாவு விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வரி விதிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து, அப்பகுதி மக்கள் கடந்த 10ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒரு தரப்பினர், இந்தப் பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் எனக் கூறி சிலர் போஸ்டர்களை ஒட்டியதாகக் கூறப்படுகிறது. 6வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

