ADDED : செப் 21, 2024 07:07 AM

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற திட்டத்துக்கு நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் நாடு முழுதும் பகிரப்படுகின்றன. கர்நாடகாவிலும், இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விபரம்:
ஜனநாயகத்தின் நம்பிக்கை!
'ஒரே நாடு ஒரே தேர்தல்' சாத்தியம் ஆகுமா என பலரது புருவம் மேல் எழுந்துள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளதால், ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம். யாருக்கும் பாதிப்பு இல்லை. அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை. அனைவருக்குமே புரியும்படி உணர்த்த வேண்டும். சாமானிய மக்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கும்.
டாக்டர் அறிவழகன்,
இதய அறுவை சிகிச்சை நிபுணர்.
தங்கவயல்.
உயர் மட்ட ஆய்வு
பொருளாதார சிக்கன நடவடிக்கைகளுக்கு பொருத்தமான நடவடிக்கை. அவ்வப்போது தேர்தல் நடத்துவதால், நிதி உட்பட எல்லாமே இரட்டிப்பாகும். இதை குறைக்க ஒரே தேர்தல் முறை அவசியமானது. இவ்விஷயத்தில், ஏனோதானோ என்று முடிவெடுக்காமல், முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான குழு சிபாரிசின் அறிக்கை என்பதால், அரசியல் ரீதியாக உயர்மட்ட ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்.
பிரபுராம்,
உதவி ஆணையர், சாரணர் இயக்கம்,
கோலார் மாவட்டம்.
பணம் விளையாட்டு
தேர்தலை வியாபாரம் ஆக்க கூடாது. பண புழக்கத்தை தான் காண முடிகிறது. ஒரே தேர்தல் முறை வந்தால், பணம் விளையாடுவதை குறைக்க முடியும். இருமுறை வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. நாட்டில் இருக்கும் இடத்தில் இருந்தே ஓட்டளிப்பது, ஆன்லைன், ஆதார் எண் உதவியுடன் ஓட்டு போட சட்ட திருத்தம் தேவை. தபால் ஓட்டுகளுக்கும் அவசியம் இருக்காது.
நடராஜன்
பைனான்சியர், கணேஷ்புரம், தங்கவயல்
பெருமை
நுனிப்புல் மேய்ந்த அறிக்கை அல்ல. சட்ட நிபுணர்கள் கருத்துகளை உள்வாங்கி உருவாக்கப் பட்டது. ஒரே தேர்தலால் ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு பாதிப்பு இருக்காது. ஆட்சியை பிடிப்பது, அதிகாரத்தை பெறுவது மட்டுமே குறிக்கோளாக உள்ளவர்கள், தேசிய வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்களே இதை எதிர்ப்பர். இவ்விஷயத்தில், நமது நாடு முன்னணியில் இருப்பது பெருமையே.
வக்கீல் திருவரங்கம்,
தங்கவயல்.
கடிவாளம்
இத்திட்டம் எப்போதோ வந்திருக்க வேண்டும். காலம் கடந்த முடிவு. தேர்தல் நடக்காத மாநிலத்தவர், தேர்தல் நடக்கும் மாநிலத்தில் புகுந்து அவர்கள் கட்சி வெற்றிக்காக கோல்மால், தகராறுகள், தாராள பண பட்டுவாடா போன்றவைகளுக்கு கடிவாளம் போட்டதாக ஆகிவிடும். அடுத்த தேர்தல் நேரத்தில் நடைமுறைக்கு வர வேண்டும்.
தயானந்தா
தொழிலதிபர், சுபாஷ்நகர், தங்கவயல்.
20_Lavanya Jagannathan
பொருளாதாரம் உயரும்!
பல நாடுகளில் ஏற்கனவே ஒரே நாடு - ஒரே தேர்தல் நடமுறையில் உள்ளது. தற்போது டிஜிட்டல் மயமாகி உள்ளதால், அதை பயன்படுத்தி சுலபமாக நம் நாட்டிலும் அமல்படுத்துவது சிறந்தது. செலவை குறைப்பது மட்டுமின்றி, நம்முடைய பொருளாதாரமும் உயரும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால், ஏதாவது ஒரு மாநிலத்துக்கு மூன்று, நான்கு மாதங்களில் தேர்தல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால், அரசியல் தலைவர்களால், வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துவதை விட, தேர்தலில் தான் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
- லாவண்யா ஜெகன்நாதன், மென்பொருள் பொறியாளர், மாரத்தஹள்ளி - நமது நிருபர் குழு -