UPDATED : ஜூன் 14, 2024 03:38 PM
ADDED : ஜூன் 14, 2024 01:26 PM

புதுடில்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நடந்தது. இந்த தேர்வின் போது வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. ஆனால், தேர்வை நடத்தும் என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை மறுத்தது. கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டதிலும் குளறுபடி நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக நடந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. நேற்று விசாரணையின் போது, 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுகிறது. மறு தேர்வு எழுதும் வாய்ப்பு தரப்படும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசு மற்றும் என்டிஏ.,வுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.