நீட் தேர்வு: கருணை மதிப்பெண் வழங்கிய 1563 பேருக்கு ஜூன் 23ல் மறுதேர்வு
நீட் தேர்வு: கருணை மதிப்பெண் வழங்கிய 1563 பேருக்கு ஜூன் 23ல் மறுதேர்வு
UPDATED : ஜூன் 13, 2024 11:50 AM
ADDED : ஜூன் 13, 2024 11:35 AM

புதுடில்லி: நீட் தேர்வில் குளறுபடி ஏற்பட்ட விவகாரத்தில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) விளக்கமளித்துள்ளது. இதனையடுத்து ஜூன் 23ல் அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டு, ஜூன் 30ல் முடிவுகள் வெளியாகிறது.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; கேள்வித்தாள் கசியவில்லை. அதே நேரத்தில், 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, நான்கு பேர் கொண்ட உயர்நிலை விசாரணைக் குழு விசாரிக்கும் என தேர்வை நடத்திய, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
சந்தேகம்
மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவுத் தேர்வு, கடந்த, மே, 5ம் தேதி நாடு முழுதும், 571 நகரங்களில், 4,750 மையங்களில் நடந்தது. இதில், 23 லட்சத்து, 33,297 பேர் தேர்வு எழுதினர். தேர்வு நாளன்று, ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.
ஆனால், அதை, தேசிய தே்ரவு முகமையான (என்.டி.ஏ.,) மறுத்தது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள், கடந்த, 4ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், ஹரியானாவில் உள்ள ஒரு மையத்தைச் சேர்ந்த, ஏழு மாணவர்கள், 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், நுழைவுத் தேர்வு முறை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இது, தேசிய அளவில், அரசியல் பிரச்னையாகவும் மாறியது. நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பல எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியதுடன், மறுதேர்வு நடத்தும்படியும் வலியுறுத்தின. ஆனால், எந்த முறைகேடும் நடக்கவில்லை என, என்.டி.ஏ., கூறியது. பிரச்னை தீவிரமாகியுள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை, டைரக்டர் ஜெனரல் சுபோத் குமார் சிங், கூறுகையில், ''நாடு முழுதும் உள்ள, 4,750 மையங்களில், ஆறு மையங்களில் மட்டுமே இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
கருணை மதிப்பெண்கள்
இந்த மையங்கள், மேகாலயா, ஹரியானாவின் பகதுார்கர்க், சத்தீஸ்கரின் தண்டேவடா, பலுாத், குஜராதின் சூரத் மற்றும் சண்டிகரில் அமைந்திருந்தன. அங்கு தேர்வு எழுதிய, 1,563 மாணவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு, என்.சி.இ.ஆர்.டி.,யின் பழைய புத்தக விடையை அளிப்பதா, புதிய புத்தக விடையை அளிப்பதா என்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதுபோல, எந்த பதிலை எடுத்துக்கொள்வது என்ற கேள்விக்கு, இரண்டு விடைகளும் சரி என்று எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டு, அதற்கேற்ப மதிப்பெண் வழங்கப்பட்டது. 1,563 மாணவர்களுக்கு மட்டுமே இந்த பிரச்னை ஏற்பட்டது'' எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்றைய (ஜூன் 13) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட உள்ளதாகவும், இன்றே அதற்கான அறிப்பாணை வெளியிட உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) விளக்கமளித்துள்ளது.
ஜூன் 30ல் ரிசல்ட்
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஜூலை 6ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகான கவுன்சிலிங் நடக்க இருக்கும் நிலையில், அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், 23ம் தேதி 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டு, ஜூன் 30ல் முடிவுகளை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டதுடன், மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடை இல்லை.மறுதேர்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு கருணை மதிப்பெண் நீக்கப்பட்டு, அசல் மதிப்பெண்களை வெளியிட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.