ஈரோடு சந்தைக்கு புது மஞ்சள் வரத்து குவின்டாலுக்கு ரூ.1,500 உயர்ந்தது
ஈரோடு சந்தைக்கு புது மஞ்சள் வரத்து குவின்டாலுக்கு ரூ.1,500 உயர்ந்தது
ADDED : பிப் 12, 2025 11:35 PM

ஈரோடு:ஈரோடு ஏல விற்பனை கூடங்களுக்கு புதிய மஞ்சள் வரத்து அதிகரித்து, குவின்டால் 1,500 ரூபாய் வரை விலை உயர்ந்துஉள்ளது.
ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலர் சத்தியமூர்த்தி கூறியதாவது:
ஈரோடு பகுதி விற்பனை கூடங்களில் பழைய மஞ்சள் குவின்டால் 7,000 முதல் 13,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. புதிய மஞ்சள் குவின்டால் 1,000 முதல் 1,500 ரூபாய் உயர்ந்து, 12,500 முதல் 14,500 ரூபாய் வரை விற்பனையாகிறது.
அந்தியூர் பகுதியில், 10 நாட்களுக்கு முன் அறுவடை துவங்கி, புதிய மஞ்சள் வரத்து உள்ளது. கர்நாடகாவிலும், தர்மபுரி மாவட்டத்திலும் அறுவடை நடந்ததால், அங்கிருந்தும் ஈரோட்டுக்கு வருகிறது.
சேலம், ஆத்துார், திருச்செங்கோட்டுக்கு, 20 சதவீதம் தான் தர்மபுரி மஞ்சள் செல்லும். ஈரோட்டுக்கு தான், 80 சதவீதம் வரத்தாகும். கர்நாடகாவில் வழக்கமான ஈரோடு மஞ்சள் ரகமும், அந்தியூர், பவானி பகுதியில் பெர்ஹாம்பூர் 80ம் நம்பர் ரகமும் அறுவடையாகி வரத்தாகிறது.
புதிய மஞ்சள் என்பதாலும், தேவை உள்ளதாலும் ஆர்வமாக வாங்குகின்றனர். புதிய மஞ்சள் வரத்தால், பழைய மஞ்சளையும் அதிகமாக விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்போது, 10,000 முதல், 15,000 மூட்டை வரை வருகின்றன.
ஆன்லைனில், ஏப்., மாதம் கொள்முதல் செய்யும் வகையில் குவின்டால், 13,000 முதல் 15,000 ரூபாய் வரையிலான விலையில் பதிவு செய்து வைக்கின்றனர். புதிய மஞ்சள் முழு அளவில் வரத்தாகும்போது, விலை நிலவரம் மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.