புதிய அடையாளம்! நக்சல் பாதிப்பு பகுதியில் தொழிற்சாலை: சத்தீஸ்கர் முதல்வர் தியோ பெருமிதம்
புதிய அடையாளம்! நக்சல் பாதிப்பு பகுதியில் தொழிற்சாலை: சத்தீஸ்கர் முதல்வர் தியோ பெருமிதம்
ADDED : ஏப் 12, 2025 11:49 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நவ ராய்ப்பூரில், 'சிப்' தயாரிக்கும் புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்துள்ளது. இது மாநிலத்தின் புதிய அடையாளமாக இருக்கும் என்றும், நக்சல் பாதித்த பகுதியில் வசிக்கும் இளைஞர்களுக்கு இதனால் பலன் கிடைக்கும் என்றும், முதல்வர் விஷ்ணு தியோ சாய் குறிப்பிட்டார்.
சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. மாநிலத்தின் முக்கிய பிரச்னையாக நக்சல் தீவிரவாத அமைப்பு இருந்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், நக்சல் ஆதிக்கம் ஒடுக்கப்பட்டு வருகிறது.
'அடுத்தாண்டு மார்ச்சுக்குள் நக்சல் அமைப்புகள் முழுமையாக ஒழிக்கப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
முதல் ஆலை
இந்நிலையில், சத்தீஸ்கர் இளைஞர்கள் பிரிவினைவாத அமைப்புகளால் துாண்டப்படுவதைத் தடுக்க, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, பல புதிய தொழிற்சாலைகள் அங்கு அமைக்கப்பட்டு வருகின்றன. நவ ராய்ப்பூரில், சிப் எனப்படும், 'செமி கண்டக்டர்' ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.
அனைத்து வகை மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை இயங்குவதற்கு, இந்த சிப் தான் இதயமாக செயல்படுகிறது. நம் நாட்டில் சிப் தயாரிப்புக்கு ஏற்கனவே பல ஆலைகள் துவக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக இந்த சிப் தயாரிக்க, 'சிலிகான்' எனப்படும் தாதுப் பொருள் பயன்படுத்தப்படும். அதற்கு மாற்றாக, 'காலியம் நைட்ரேட்' என்ற தாதுப் பொருள் வாயிலாக சிப் தயாரிக்கும், நாட்டின் முதல் ஆலை சத்தீஸ்கரில் அமைகிறது.
பத்திரப்பதிவு
வரும் 2030ல், ஆண்டுக்கு 1 கோடி சிப்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆலையில், அடுத்தாண்டு மே மாதத்தில் உற்பத்தி துவங்க உள்ளது.
இந்த ஆலை திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறியுள்ளதாவது:
இது ஒரு ஆலை மட்டும் அல்ல; மாநிலத்தின் புதிய அடையாளமாக அமைய உள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக, காலியம் நைட்ரேட் பயன்படுத்தி சிப் தயாரிக்கும் ஆலையாக இது விளங்க உள்ளது.
மேலும், மாநிலத்தில் தொழில் துறையில் முதலீட்டை ஈர்ப்பதாக மட்டும் அமையப் போவதில்லை.
பழங்குடியின, கிராமப்புற, மிகவும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு புதிய வாழ்க்கையை இந்த ஆலை உருவாக்கி தர உள்ளது. இந்த இளைஞர்கள், நம் நாட்டின் தொழில்நுட்ப புரட்சியில் தங்களையும் இணைத்து கொள்ள உள்ளனர்.
இந்த ஆலையால், நக்சல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பஸ்தார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பெரும் பலன் கிடைக்க உள்ளது. இந்த ஆலைக்காக நவ ராய்ப்பூரில், டெண்டர் முறையில், 45 நாட்களுக்குள் நிலம் ஒதுக்கப்பட்டது.
அடுத்த, 25 நாட்களில் பத்திரப்பதிவு நடந்தது. இந்த ஆலைக்கு, பத்திரப் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.