பெங்களூரு ஹோட்டல் குண்டு வெடிப்பு: சந்தேக நபரின் புதிய படங்கள் வெளியீடு
பெங்களூரு ஹோட்டல் குண்டு வெடிப்பு: சந்தேக நபரின் புதிய படங்கள் வெளியீடு
ADDED : மார் 09, 2024 11:48 PM

புதுடில்லி: பெங்களூரில், 'ராமேஸ்வரம் கபே' உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய சந்தேக நபரின் புதிய புகைப்படங்களை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று வெளியிட்டது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்கு, பெங்களூரில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கபே உணவகத்தில், கடந்த 1ம் தேதி மதியம் 12:56 மணிக்கு குண்டு வெடித்தது. இதில், நான்கு பெண்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பான வழக்கை, என்.ஐ.ஏ., அமைப்பு விசாரித்து வருகிறது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படங்களை, சமீபத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் வெளியிட்டனர். மேலும், இவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு, 10 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரின் புதிய புகைப்படங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.
சம்பவம் நடந்த 1ம் தேதி இரவு 9:00 மணி அளவில், அந்த நபர் பஸ் நிலையம் அருகே முகக் கவசத்துடன், டி - ஷர்ட் அணிந்து வருவது போன்ற புகைப்படங்களை என்.ஐ.ஏ., அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
விசாரணையின்படி, குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பின், உடையை மாற்றிய அந்த நபர், துமகூரு, பெல்லாரி போன்ற இடங்களுக்கு பஸ்களில் பயணம் செய்துள்ளார்.
மேலும் அடையாளத்தை தவிர்ப்பதற்காக, அவ்வப்போது உடைகளை அவர் மாற்றி உள்ளார் என தெரிய வந்துள்ளது.

