ADDED : பிப் 14, 2025 12:57 AM

புதுடில்லி வருமான வரி சட்டங்களை சீர்திருத்துவதற்கான புதிய வருமான வரி மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா வாயிலாக, 1961ல் இயற்றப்பட்ட வருமான வரி சட்டத்தில் உள்ள கடுமையான வார்த்தை ஜாலங்கள் எளிமையாக்கப்பட்டுஉள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
லோக்சபா நேற்று மதியம் 2:00 மணிக்கு கூடியதும், புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுந்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட துவங்கினர்.
'பழைய வரி மசோதாவை விட புதிய மசோதா மிகவும் சிக்கலானது' என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். சில உறுப்பினர்கள் கூச்சலிட்டபடி சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பரிசீலனை
அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்து முற்றிலும் தவறானது. தற்போதைய வரி சட்டத்தில், 800க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. அவை, 536 ஆக குறைக்கப்பட்டுள்ளன.
“விரிவான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சட்டத்தில் உள்ள வார்த்தைகள் பாதிக்கு பாதியாக குறைக்கப்பட்டுள்ளன. வரி தாக்கல் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன,” என்றார்.
எதிர்க்கட்சியினரின் அமளிக்கு மத்தியில் புதிய வருமான வரி மசோதாவை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின், அதை பார்லிமென்ட் கூட்டு கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பும்படி சபாநாயகர் ஓம் பிர்லாவை கேட்டுக் கொண்டார்.
அந்த கமிட்டி, புதிய வரி திட்டங்களை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் மாற்றங்களை செய்யும். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதியின் முதல் நாளான மார்ச் 10ல், அக்குழு அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன்பின், இந்த மசோதா லோக்சபாவில் மீண்டும் தாக்கல் செய்யப்படும்.
விளக்கம்
மசோதா தாக்கலுக்கு பின், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு:
புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இன்று வரை திருத்தப்பட்ட சட்டத்தின் மொழியை எளிமையாக்குவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிதியமைச்சகத்தின் இணையதளத்தில் மசோதாவின் நகல் காண கிடைக்கும். பொதுவாக எழும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.