ADDED : நவ 30, 2024 07:33 AM
பெங்களூரு : பெங்களூரு சர்ஜாபூரில் 1,050 ஏக்கரில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நகரம் என்ற புனை பெயரால் பெங்களூரு அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள் இங்கு இருப்பதுதான்.
இங்குள்ள ஐ.டி., நிறுவனங்களில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர். தற்போது எலக்ட்ரானிக் சிட்டி, ஒயிட்பீல்டில் ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன.
இந்நிலையில் கர்நாடகா - தமிழக மாநில எல்லையில் உள்ள ஓசூர் அருகே சர்ஜாபூரில் 1,050 ஏக்கரில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக சர்ஜாபூர், பிக்கனஹள்ளி, எஸ்.மேடஹள்ளி, அதிகா கல்லஹள்ளி, சொல்லேபுரா, முர்தநல்லுார், ஹண்டேனஹள்ளி ஆகிய கிராமங்களில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நிலத்தை கையகப்படுத்தும் பணியை கர்நாடக தொழில் மேம்பாட்டுக் கழகம் செய்து வருகிறது.
செயற்கை நுண்ணறிவு, நிதி, தொழில்நுட்பம் உள்ளிட்ட ஐந்து முக்கிய துறைகளில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம், இளம் தொழில் முனைவோரை ஈர்க்கும் திட்டத்தை தொழில் துறை அமைச்சர் எம்.பி., பாட்டீல் முன்னெடுத்து வருகிறார்.
வரும் பிப்ரவரியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்புக்கு முன்பு, புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா தொடர்பான திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

