ADDED : ஜன 29, 2024 07:05 AM
ஆனேக்கல்: பன்னரகட்டா தேசிய தேசிய பூங்காவில், பெண் யானை வேதா ஆண் குட்டியை ஈன்றது.
இதுதொடர்பாக, பூங்கா செயல் நிர்வாக இயக்குனர் சூர்யசேன் நேற்று கூறியதாவது:
பெங்களூரு ரூரல் ஆனேக்கல்லின், பன்னரகட்டா தேசிய பூங்காவில் வசிக்கும் வேதா யானை, நேற்று (நேற்று முன் தினம்) ஆண் குட்டி ஈன்றது. இது வேதாவுக்கு பிறந்த ஐந்தாவது குட்டி. ஏற்கனவே வேதாவுக்கு சம்பா, ஐராவத், ஸ்ருதி, ஐஹில்யா என்ற நான்கு குட்டிகள் உள்ளன.
தற்போது ஈன்ற குட்டி, 120 முதல் 130 கிலோ எடை கொண்டது. ஆரோக்கியமாக உள்ளது. பூங்கா ஊழியர்கள், குட்டி யானையை அக்கறையுடன் பராமரிக்கின்றனர். தாய் யானைக்கு பச்சைப்பயிறு, தேங்காய், உளுந்து, அவல், கடலைப்பருப்பு உட்பட, ஊட்டச்சத்தான உணவு வழங்கப்படுகிறது.
குட்டி யானையின் வருகை, அதன் குறும்புத்தனமான விளையாட்டு, பூங்காவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.