கே.சி.ஜெனரல் மருத்துவமனையில் புதிய தாய், சேய் பிரிவு
கே.சி.ஜெனரல் மருத்துவமனையில் புதிய தாய், சேய் பிரிவு
ADDED : டிச 29, 2024 11:08 PM

பெங்களூரு: மல்லேஸ்வரம் கே.சி.ஜெனரல் மருத்துவமனை வளாகத்தில், புதிதாக தாய், சேய் மருத்துவமனை கட்ட சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் உள்ள கே.சி.ஜெனரல் மருத்துவமனை, 13.5 ஏக்கர் கொண்டது. இங்கு பெண்கள், பிரசவ பிரிவுகளில் 100 படுக்கைகள் உள்ளன. இங்கு சிகிச்சைக்கு வரும், பெண்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
நோயாளிகள் அதிகம் வந்தால், சிகிச்சை அளிப்பது கஷ்டமாகிறது. இதனால் நோயாளிகள் வாணி விலாஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். அதே போன்று வேறு மருத்துவமனைகளின் சிபாரிசுடன், கே.சி.ஜெனரல் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகம்.
அதிகரிப்பு
இச்சூழ்நிலையில், தாய், சேய்களின் சிகிச்சைக்கு பிரச்னை ஏற்படுகிறது. இதை மனதில் கொண்டு, கே.சி.ஜெனரல் மருத்துவமனை வளாகத்தில், 200 படுக்கைகள் கொண்ட தாய், சேய் மருத்துவமனை கட்ட திட்டம் வகுக்கப்பட்டது. நடப்பாண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.
பல்லாரியில் குழந்தை பிரசவித்த பெண்களின் தொடர் இறப்புகள் நடப்பதால், சுகாதாரத் துறை கே.சி.ஜெனரல் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்படும் புதிய தாய், சேய் மருத்துவனை கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. 66.78 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த மருத்துவனை, 12,824 சதுர அடி பரப்பளவு கொண்டது. நான்கு மாடிகள் கொண்டது.
9,000 பேர்
பெங்களூரு மருத்துவ கல்லுாரி மற்றும் ஆய்வகம் கட்டுப்பாட்டில் இயங்கும் வாணி விலாஸ் தாய், சேய் மருத்துவமனை, கர்நாடகாவின் மிகப்பெரிய தாய், சேய் மருத்துவமனையாகும். மாதந்தோறும் 8,000 முதல் 9,000 நோயாளிகள், இம்மருத்துவமனைக்கு வருகின்றனர். மாதம் 1,300 முதல் 1,500 பிரசவங்கள் நடக்கின்றன.
ஜெயநகர் பொது மருத்துவமனை, கே.சி.ஜெனரல் மருத்துவமனை, பெங்களூரு மாநகராட்சியின் 26 பிரசவ மருத்துவமனைகள் உட்பட, பல்வேறு மருத்துவமனைகளில் இருந்தும், வாணி விலாஸ் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
கே.சி.ஜெனரல் மருத்துவமனை வளாகத்தில், புதிய மருத்துவமனை செயல்பட துவங்கினால், வாணி விலாஸ் மருத்துவமனையில் நோயாளிகள் நெருக்கடி குறையும். ஒன்றரை ஆண்டுகளில் பணிகள் முடிவடையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.