நெடுந்துார ரயில் பெட்டிகள் இனி 'பளிச்': துாய்மைக்காக புது சீர்திருத்தம் அறிமுகம்
நெடுந்துார ரயில் பெட்டிகள் இனி 'பளிச்': துாய்மைக்காக புது சீர்திருத்தம் அறிமுகம்
ADDED : பிப் 15, 2026 12:15 AM

புதுடில்லி: நாடு முழுதும், நெடுந்துார ரயில்களில் துாய்மையை காக்கும் வகையில் தொழில்நுட்பத்துடன் கூடிய சீர்திருத்தத்தை மத்திய ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
டில்லியில் இந்த சீர்திருத்தம் குறித்து பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இனி ரயில் பயணங்களின்போது பொது பெட்டிகளும் துாய்மையுடன் இருக்கும் என உறுதி அளித்தார்.
தொழில்நுட்ப குழு
இது குறித்து அவர் கூறியதாவது:
நெடுந்துார ரயில்களில் பயணியர் வசதிக்காக ஏ.சி., பெட்டிகள் மட்டுமின்றி, ஏழை, எளிய மக்கள் பயணிக்கும் பொது பெட்டிகளையும் துாய்மையாக வைத்துக் கொள்ள ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக தொழில்நுட்பத்துடன் கூடிய குழுவை பணியில் அமர்த்தப் போகிறோம்.
தற்போது நெடுந்துார ரயில்களில், குறிப்பிட்ட பெரிய ரயில்வே ஸ்டேஷன்களில் மட்டுமே துாய்மை பணி நடக்கிறது.
ஆனால், புதிய சீர்திருத்தத்தின்படி, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையோ, அல்லது தேவைப்படும்போதோ ரயில் பெட்டிகளில் துாய்மை பணி மேற்கொள்ளப்படும்.
வருவாய் பெருகும்
தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்த துாய்மை பணிகள் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படும். இதற்காக, 'வார் ரூம்' அமைக்கப்படும்.
ரயில் பெட்டிகள், கழிப்பறைகள், கை கழுவும் தொட்டிகள், குப்பைத் தொட்டிகள் என அனைத்து பகுதிகளிலும் துாய்மை பணி நடக்கும். சிறு பழுதுகள் ஏற்பட்டாலும் நீக்கப்படும்.
நீர் இருப்பு, தேவை குறித்தும் அவ்வப்போது சோதனை செய்யப்பட்டு அதற்கான தேவை இருந்தால் உடனடியாக பூர்த்தி செய்யப்படும். முதற்கட்டமாக 80 நெடுந்துார ரயில்களில் இந்த துாய்மை சீர்தி ருத்தம் அமலாகவுள்ளது.
இதில் கிடைக்கும் அனுபவம், வரவேற்பை தொடர்ந்து அனைத்து ரயில்களிலும் அமல் படுத்தப்படும். அதே போல், பயன்பாட்டில் இல்லாத ரயில்வே நிலங்களில் சரக்குகள் கையாளும் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
குறிப்பாக, அரவை நிலையங்கள், உணவு பதப்படுத்தும் ஆலைகள், கிடங்குகள் அமைக்க அனுமதி தரப்படும். இதன் மூலம் ரயில்வேயின் வருவாய் பெருகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

