தென் மேற்கு ரயில்வேயில் விபத்தை தடுக்க ரூ.1,740 கோடியில் புதிய தொழில்நுட்பம்
தென் மேற்கு ரயில்வேயில் விபத்தை தடுக்க ரூ.1,740 கோடியில் புதிய தொழில்நுட்பம்
ADDED : பிப் 01, 2025 12:18 AM
ஹூப்பள்ளி: தென் மேற்கு ரயில்வே யில் விபத்துகளை தடுப்பதற்கு 1,740 கோடி ரூபாயில் புதிய தொழில்நுட்பம் நிறுவப்பட உள்ளது.
நாட்டின் போக்குவரத்தில் ரயில்வே முக்கிய பங்காற்றி வருகிறது. ரயில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, 'கவச் 4.0' எனும் பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் ரயில் விபத்துகளை தடுக்க முடியும். இது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம், ரயில் வேகத்தை கட்டுப்படுத்த முடியும். லோகோ பைலட் ரயிலை, அதி வேகமாக ஓட்ட முயற்சி செய்தாலும், ரயில் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லாது.
செயல்பாடு
ரயில் இன்ஜின்களில், ரேடியோ சிக்னல்கள் கொண்ட தொழில்நுட்பம் பொருத்தப்படும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 40 மீட்டர் உயர கோபுரம் அமைக்கப்படும். இதன் மூலம் ரயில்களின் சிக்னல்கள் விரைவில் கிடைக்கும்.
தண்டவாளத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் சிப்கள் பொருத்தப்படும். ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் ஆர்.எப்.ஐ.டி., எனும் இரண்டு ரேடியோ சிக்னல் கம்பங்கள் அமைக்கப்படும்.
இதன் மூலம் ரயில் வருவது குறித்த தகவல், ரயில் நிலையத்திற்கு உடனடியாக தெரியவரும். இதன் மூலம் விபத்துகள்தவிர்க்கப்படும்.
ரயில் தண்டவாளத்தில் ரயில் நின்று இருந்தாலோ, எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்தாலோ, ரேடியோ சிக்னல்கள் மூலம் லோகோ பைலட்டின் உதவியின்றி, ரயில் தானாகவே நின்றுவிடும். மூடுபனியால் பாதை தெரியாவிட்டாலும் ரேடியோ சிக்னல்கள் மூலம் ரயிலை இயக்க முடியும். இதனால் விபத்து தவிர்க்கப்படும்.
தவிர்ப்பு
இத்திட்டம் குறித்து நேற்று தென்மேற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி மஞ்சுநாத் கன்மாடி கூறியதாவது:
ரயில்வேயில் பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்று. இத்திட்டத்தின் மூலம் ரயில்கள் நேருக்கு நேர் மோதுவதையும், பின்னால் இருந்து மோதுவதையும் தவிர்க்கும். இத்திட்டம் ஐரோப்பாவில் நடைமுறையில் உள்ளது.
கடந்த ஆண்டு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டம் நவீனமயமாக்கப்பட்டு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தென்மேற்கு ரயில்வேயின் மொத்த துாரம் 3,692 கி.மீ., முதல் கட்டமாக 600 கோடி ரூபாய் செலவிலும், இரண்டாவது கட்டமாக 1,144 கோடி ரூபாய் செலவிலும் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. 2026ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.