ADDED : நவ 20, 2021 08:35 PM

புதுடில்லி:நம் கடற்படையின் பலத்துக்கு மேலும் வலுவூட்டும் வகையில், ரேடார்களால் கண்டுபிடிக்க முடியாத, எதிரியை அழிக்கும் ஏவுகணைகள் உடைய, 'ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம்' என்ற போர்க் கப்பலை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அர்ப்பணிக்கிறார்.
'மசாகோன்'
நம் கடற்படைக்கு வலு சேர்க்கும் வகையில் நவீன கருவிகள், வசதிகள் உள்ள போர்க் கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. கடற்படை வடிவமைப்பு இயக்குனரகம் வடிவமைத்துள்ள இந்த கப்பலை, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள, 'மசாகோன்' நிறுவனம் கட்டுமானம் செய்துள்ளது.மும்பையில்
இன்று நடக்கும் விழாவில் இந்த கப்பலை, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.எதிரிகளின் ரேடார்களில் சிக்காத, எதிரிகளை அழிக்கும் ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் இந்த போர்க் கப்பல், 7,400 டன் எடையுள்ளது. மொத்தம் 163 மீ., நீளமுள்ள இந்த கப்பல், 30 கடல் மைல் வேகத்தில் இயங்கக் கூடியது. இதில் உள்ள கருவிகள், ஆயுதங்கள் என, 75 சதவீதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை.
கூடுதல் வலிமை
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் போர்க் கப்பல், நம் கடற்படைக்கு கூடுதல் வலிமையை தரும்.
