தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': பெண் மதபோதகர் கைது கோரி ஆர்ப்பாட்டம்

இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': பெண் மதபோதகர் கைது கோரி ஆர்ப்பாட்டம்

இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': பெண் மதபோதகர் கைது கோரி ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 27, 2021 10:04 AM

ADDED : நவ 27, 2021 09:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2021 10:04 AM ADDED : நவ 27, 2021 09:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.10 கோடி மோசடி தொழிலதிபர் கைது


ஈரோடு:ஈரோடில் ஏலச்சீட்டு நடத்தி, 1௦ கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான தொழிலதிபரை, போலீசார் கைது செய்தனர்.Image 901198ஈரோடு, சூளையைச் சேர்ந்தவர் பாபு, 52; சோப்பு தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார்; ஈரோடு, அசோகபுரத்தில் ஏலச்சீட்டு நிறுவனமும் நடத்தினார். தினசரி வசூல், வார வசூல், மாத வசூல் என்ற பெயரில், 50 ஆயிரம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை ஏலச்சீட்டு நடத்தினார். இதில், 250க்கும் மேற்பட்ட மக்கள், கூலி தொழிலாளர்கள் சீட்டு போட்டனர்.

ஏலம் எடுத்த பலருக்கு பணம் தராமல் காலம் தாழ்த்திய நிலையில், கடந்த மாதம் நிறுவனத்தை மூடி, குடும்பத்தோடு தலைமறைவானார். பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தனர். அவர், 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. பாபுவை, ஈரோடு வடக்கு போலீசார் கைது செய்தனர்.

பெண் மதபோதகர் கைது கோரி ஆர்ப்பாட்டம்


சென்னை:நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய, பெண் மதபோதகரை கைது செய்யக்கோரி, நாடார் சங்கம் சார்பில், குன்றத்துாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.Image 2900059சென்னை குன்றத்துார் சர்ச்சில், பெண் மதபோதகர் ஒருவர், நாடார் சமூகத்தினர் குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.அவரை கைது செய்ய வேண்டும் என நாடார் சங்கம் சார்பில், சில நாட்களுக்கு முன், குன்றத்துார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், பெண் மதபோதகர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண் மதபோதகரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன் தலைமையில், அகில இந்திய நாடார் மகாஜன சபை தலைவர் கார்த்திகேயன் முன்னிலையில், குன்றத்துார் பஸ் நிலையத்தில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், நாடார் சங்க அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பெண் மதபோதகரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்

ரவுடி கொலை: 8 பேர் கைது


செங்கல்பட்டு முருகேசனார் தெருவைச் சேர்ந்த மோகன் மகன் விக்னேஷ் என்ற விக்கி, 28; ரவுடி.தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், 23ம் தேதி, ஒழலுாரில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார்.

அப்போது, பின்னால் வந்த மர்ம கும்பல், விக்னேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்து, தப்பிச்சென்றது.இது குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, செங்கல்பட்டு நகரைச் சேர்ந்த அன்வர், 29, பன்னீர்செல்வம், 32, அஜய், 20, ரஞ்சித்குமார், 28, விஜயபா, 21, ஆகாஷ், 20, ராஜன், 22, ஆகியோரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தறிகெட்டு ஓடிய கார் மோதி காயமடைந்த ஐவரில் பெண் பலி


மாதவரம் : ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதிய சம்பவத்தில், காயமடைந்த ஐவரில் சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் பலியானார்.

சென்னை, மாதவரம் பால்பண்ணை அடுத்த பெரிய மாத்துார், காமராஜர் சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு சந்திப்பில், நேற்று முன்தினம் மாலை, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த 'இன்னோவா' சொகுசு கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. பின்னர், நிற்காமல் சென்ற அந்த கார் அருகில் உள்ள வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்த பெண்கள் மீதும் மோதியது. கார் ஓட்டுனர் தப்பினார்.

விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெரிய மாத்துார், காமராஜர் சாலையைச் சேர்ந்த மகேஷ்குமார், 42; அவரது மனைவி கலா, 36; மற்றும் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்த பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சாந்தி, 36, சுகுணா, 41, அவரது மகள் கலைச்செல்வி, 15, ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.அனைவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர்.

அதில் சாந்தி உயிரிழந்தார். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணையில், இந்த விபத்தில் சிறிய காயங்களுடன் தப்பிய, 65 வயது கார் ஓட்டுனர், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிந்தது.

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய பதட்டத்தில், ஓட்டுனர் பிரேக் போட்டு அதை நிறுத்த முயன்று, தவறுதலாக 'ஆக்சிலேட்டரை' மிதித்துள்ளார். அதனால், கார் கட்டுப்பாட்டை இழந்து, வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்த மூன்று பெண்கள் மீதும் மோதியது தெரியவந்தது. சிகிச்சை பெறும் கார் ஓட்டுனரை கைது செய்ய, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாணவியிடம் சில்மிஷம்; வாலிபருக்கு 'போக்சோ'


கொடுங்கையூர் : கொடுங்கையூரில், சாக்லெட் வாங்கிக் கொடுத்து, பிளஸ் டூ மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர், ஆர்.வி., நகரைச் சேர்ந்தவர் உமாசங்கர், 32. இவர், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ படிக்கும், 16 வயது மாணவி, டியூஷனுக்கு வரும் போது, அவரிடம் பேசிப் பழகி, சாக்லெட் வாங்கிக் கொடுத்து, வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் கூறியதால், எம்.கே.பி., நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், உமாசங்கர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அவரை 'போக்சோ'வில் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ரூ.1 கோடி 'ஆட்டை'; பொறியாளர் கைது


சென்னை தேனாம்பேட்டையில், 'மேக்ஸ் வேல்யூ ஹவுசிங்' என்ற கட்டுமான நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தை தேவி என்பவர் நடத்தி வருகிறார். பங்குதாரராக பொறியாளர் கதிர் அகமது, 57, என்பவர் இருந்தார்.Image 901195

இவர், 2011 - 16 வரை தேவிக்கு தெரியாமல், காசோலை வாயிலாக 1 கோடி ரூபாய் திருடி உள்ளார்.இதுகுறித்து தேவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, கதிர் அகமதுவை நேற்று கைது செய்தனர்.

கடற்படை கமாண்டன்ட் கடலில் மூழ்கி இறப்பு

Image 901197டில்லியில், கடற்படை லெப்டினன்ட் கமாண்டன்டாக பணிபுரிந்தவர் சுரேஷ், 36. இவருக்கு மனைவி திவ்யா, மகள் சவுபர்ணிகா, 8, ஆகியோர் உள்ளனர்.மனைவியின் சகோதரி திருமணத்திற்காக, சென்னை துரைபாக்கத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு, விடுமுறையில் வந்தார்.

நேற்று முன்தினம் மாலை குடும்பத்துடன் கோவளம் கடற்கரை சென்றார். குடும்பத்தினர் கரையில் பேசிக்கொண்டிருந்தனர்; சுரேஷ் மட்டும் கடலில் குளிக்க சென்றார். அப்போது ராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார்.

கேளம்பாக்கம் மற்றும் கோவளம் கடலோர போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு, இரவு வரை தேடுதல் பணி நடந்தது.தொடர்ந்து நேற்று காலை, கப்பல் படையின் மூன்று ரோந்து கப்பல்கள், விமானப்படையின் ஒரு ஹெலிகாப்டர் வைத்து தேடப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் 1:00 மணிக்கு, மாமல்லபுரம் அடுத்த, சாலவான்குப்பம் புலிக்குகை பகுதி கடற்கரையில், சுரேஷின் உடல் கரை ஒதுங்கியது.மாமல்லபுரம் போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

நடுரோட்டில் 'கேக்' வெட்டி ரகளை; போலீசை தாக்கிய மூவர் கைது


சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி., நகர், 4வது மெயின் தெரு, 15வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மார்ட்டின், 24; தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர்களான கொடுங்கையூரை சேர்ந்த கலைச்செல்வன், 27; வியாசர்பாடியைச் சேர்ந்த ஜான் ஆல்வின், 23, ஆகியோர், நேற்று முன்தினம் நள்ளிரவில் கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர், 1வது தெரு சந்திப்பில், குடிபோதையில் மார்ட்டின் பிறந்த நாளை 'கேக்' வெட்டி கொண்டாடினர்.

பின்னர், போதையில் குத்தாட்டம் போட்டுள்ளனர். அப்போது, ரோந்து ஜீப்பில் வந்த கொடுங்கையூர் காவல் நிலைய தலைமைக் காவலர் சக்திவேல் முருகன், 'நடுரோட்டில் 'கேக்' வெட்டி கலாட்டா செய்வீர்களா' என கண்டித்தார். அப்போது, மூவரும் சேர்ந்து, ஜீப் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். சக்திவேல் முருகன் மீதும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

கத்தியுடன் சுற்றிய நபர்களிடம் விசாரணை


புளியந்தோப்பு : புளியந்தோப்பு அடுத்த கன்னிகாபுரம், வெங்கடேஸ்வரா புதிய காலனி 5வது தெருவில், சந்தேக நபர்கள் இருப்பதாக புளியந்தோப்பு போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போது, கத்திகளுடன் இருந்த மயிலாப்பூரைச் சேர்ந்த ஆனந்தபாபு, 28, புளியந்தோப்பைச் சேர்ந்த விஜயகுமார், 34, பிராட்வேயை சேர்ந்த டேவிட்சன், 18, மற்றும் புளியந்தோப்பு குருசாமி நகரை சேர்ந்த, 17 வயது சிறுவன் சிக்கினர். விசாரித்ததில், சம்பவ இடத்தில் ஒரு வீட்டில் வசிக்கும் பெண்ணை, அந்த வீட்டு உரிமையாளர் கூறியபடி மிரட்டச் சென்றது தெரிந்தது; போலீசார் விசாரிக்கின்றனர்.

அரசு பள்ளி ஆசிரியரிடம் ரூ.97 ஆயிரம் திருட்டு


திண்டிவனம்-திண்டிவனத்தில் அரசு பள்ளி ஆசிரியரிடம் 97 ஆயிரம் ரூபாய் மற்றும் மொபைல் போன் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், தில்லையாடி வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் சரவணன், 50; அரசு பள்ளி ஆசிரியர். இவர், நேற்று நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து 97 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். அந்த பணத்துடன் மொபைல் போனையும் பைக் பெட்டியில் வைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார்.

அங்கு சென்று பார்த்தபோது, பைக் பெட்டியில் இருந்த 97 ஆயிரம் ரூபாய் மற்றும் மொபைல் போனைக் காணவில்லை.இது குறித்து சரவணன் திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து பணம் மற்றும் மொபைல் போனை திருடிய நபரை தேடி வருகின்றனர்.

ரூ.4 கோடி 'ஏப்பம்' கில்லாடி தம்பதி கைது


சென்னை : கல்வி, சுகாதாரத்துறை மற்றும் விமான நிலையம் என, பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 60 பேரிடம், 4 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி மோசடி செய்த தம்பதியை, போலீசார் கைது செய்தனர்.

Image 901196வளசரவாக்கம், வீரப்பா நகர், அனெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரபிரபு, 51. இவரது மனைவி சசிபிரியா, 43. இவர்கள் 2016ல் இருந்து அதே பகுதியில், 'மாஸ் மேன் பவர் கன்சல்டன்சி' என்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்தனர்.திருவாரூரைச் சேர்ந்த இரண்டு பேருக்கு, நெய்வேலி என்.எல்.சி.,யில் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக, தலா 16 லட்சம் என, 32 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர்.சென்னை சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த ஏழு பேருக்கு, உயர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகள் வாங்கித் தருவதாக, 40 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர்.

அதேபோல, சென்னையைச் சேர்ந்த காந்தா என்பவரின் மகனுக்கு விமான நிலையத்தில், குடியுரிமை அதிகாரியாக வேலை வாங்கித் தருவதாக, 20 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர்.இவர்களுடன், கல்வி, சுகாதாரம், அறநிலையத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, 60 பேரிடம், 4 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி மோசடி செய்துள்ளனர். இதற்கு, அமெரிக்காவில் படித்து வரும் மகள் அக் ஷதா உடந்தையாக இருந்துள்ளார்.இந்த மோசடி குறித்து, காந்தா, 42 என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து, ரவிச்சந்திரபாபு மற்றும் சசிபிரியாவை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.இவர்களிடம் இருந்து, போலி பணி நியமன ஆணைகள், அரசு முத்திரையுடன் போலி சிபாரிசு கடிதங்கள், மடிக்கணினி, 10 மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இவர்களின் மகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

போலீசாரிடம், ராமச்சந்திரபிரபு அளித்துள்ள வாக்குமூலம்:நான், எட்டாம் வகுப்பு படித்துள்ளேன். மனைவி பிளஸ் 2 படித்துள்ளார். எங்களுக்கு ராயப்பேட்டையில், சொந்த வீடு உள்ளது. அந்த வீட்டின் வாடகை பணத்தில் குடும்பம் நடத்தி வந்தோம்.ஆடம்பர செலவுக்கு பணம் தேவைப்பட்டது. இதனால் மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து, 2016ல் இருந்து தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டு வந்தோம்.இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.

காவலரின் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு


சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை பிரிவில், காவலரின் காலில் இரண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ், 34; ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில், சிறப்பு இலக்கு அதிரடிப்படை பிரிவு காவலர். நேற்று முன்தினம் அதிரடிப்படை வளாகத்தில், சக காவலர்களுடன் துப்பாக்கிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்ததில், இரண்டு குண்டுகள் சுவரில் பட்டு சந்தோஷின் வலது, இடது காலில் பாய்ந்தது.

காயமடைந்த சந்தோசை போலீசார் சத்தி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்திய நிகழ்வுகள்


துணிக்கடையில் திருடிய பட்டதாரி பெண் கைது


.புதுச்சேரி குண்டுப்பாளையம் ரத்னா நகரை சேர்ந்தவர் தணிகாசலம்; காந்தி நகர் வழுதாவூர் சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 19ம் தேதி மாலை 3.30 மணியளவில் கடையில் இருந்தபோது, 30 வயது மதிக்கத்தக்க பெண் வந்தார். 8 ஆயிரத்திற்கு சேலை உள்ளிட்ட துணிகளை வாங்கியுள்ளார்.

அதற்கு ஜிபே மூலம் பணம் அனுப்புவதாக கூறியுள்ளார்.கடையில் இருந்த கியூஆர் கோர்ட் ஸ்கேன் செய்து பணம் அனுப்பி விட்டதாக கூறி துணிகளை எடுத்து சென்றுள்ளார். ஆனால், அவர் பணம் அனுப்பாமல், ஏமாற்றியது தெரியவந்தது.அன்று இரவே 9:00 மணிக்கு திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் தெருவில் உள்ள மற்றொரு துணி கடையிலும் ரூ. 7 ஆயிரம் மதிப்பில் துணிகளை எடுத்து கொண்டு இதேபோல் ஏமாற்றி விட்டு சென்றுள்ளார்.

தணிகாச்சலம் அளித்த புகாரின்பேரில், டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து கடையில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தர்மாபுரி காமராஜ் சாலையைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரி அனுசுயா, 30; என்ற பெண் பணம் கொடுக்காமல் துணிகளை பெற்று சென்றது தெரியவந்தது.தாய் தந்தை இல்லாத அனுசுயாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாடால், கணவர் பிரிந்து சென்று விட்டார். போலீசார் அனுசுயாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரியில் தொடர் செயின் பறிப்பு வழக்கில் மதுரை ரவுடிகள் 4 பேர் கைது; 30 சவரன் பறிமுதல்

Image 901199புதுச்சேரியில் 2019ம் ஆண்டு மே 31ம் தேதி கோரிமேட்டில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயினை பறித்து சென்றனர்.ஜூன் 7ம் தேதி தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகர் பகுதியில் மொபட்டில் சென்ற பெண்ணிடமும், லாஸ்பேட்டை லட்சுமி நகர், குமரன் நகர் பகுதியில் கத்தியை காட்டி மூன்று பெண்களிடமும் செயின் பறித்து சென்றனர்.

அடுத்த சில நாட்களில் தாகூர் நகரில் வீட்டு வாசலில் நின்றிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 சவரன் செயினை பறித்து சென்றனர். அதே கும்பல், கருவடிக்குப்பம் ஜிஞ்சர் ஓட்டல் அருகே டைலர் கடைக்குள் புகுந்து, பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி செயின் பறித்து சென்றனர்.ஜூன் 14ம் தேதி உருளையன்பேட்டை முல்லை நகரில், திருமணத்திற்கு சென்று திரும்பிய பைனான்சியர் விநாயகம் மனைவி பிரேமா, 53, கழுத்தில் இருந்த 12 சவரன் செயினை பறித்தனர். செயின் பறிப்பில் ஈடுபட்டது

மதுரை ரவுடி அப்பளம் ராஜா, பாட்டில் மணி கும்பல் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. வடக்கு எஸ்.பி., சுபம்கோஷ் உத்தரவின்பேரில், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்இன்ஸ்பெக்டர் திருமுருகன் மேற்பார்வையில், வடக்கு கிரைம் போலீஸ்காரர்கள் ஜெயகுமார், ராஜி, கோவிந்தன், ராஜவேல் குழுவினர் மதுரை சென்றனர்.

அங்கு ரவுடி அப்பளம் ராஜாவின் கூட்டாளிகளான, ஜெய்ஹிந்த்புரம் ரவுடி ராம்கி (எ) கந்தசாமி, 32; கார்த்தி, 30; மதுரை டி.வி.எஸ். நகர், ராஜம் சாலை, செந்தில் (எ) உண்டியல் செந்தில், 30; சிவகங்கை மனகரை ஆனந்த் (எ) டக்கி ஆனந்த், 24; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 சவரன் நகைகளை பறிமுதல் செய்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

அவர்கள் அடகு வைத்த மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு புதுச்சேரி ரவுடி உள்ளிட்ட இருவர் உதவியுள்ளனர். செயின்பறிப்பில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையில் கணிசமான தொகை புதுச்சேரி ரவுடிக்கும் கொடுத்துள்ளனர். எனவே, மதுரை ரவுடி கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை: எட்டு பேர் சிக்கினர்


பாலக்காடு:ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை வழக்கில் எட்டு பேர் சிக்கியுள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே எலப்புள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சஞ்ஜித் 27, நவ. 15ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.மேலும் 6 பேர் சிக்கியுள்ளதாக போலீசார் கூறினர்.

பாலக்காடு போலீசார் கூறியதாவது: சஞ்ஜித்தை கொலை செய்த வழக்கில் எட்டு பேர் சிக்கியுள்ளனர். இவர்கள் பெயர் மற்றும் விலாசம் உள்ளிட்ட விபரங்கள் போலீசாரிடம் உள்ளது. இதில் ஐந்து பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இவர்களுக்கு மூன்று பேர் வெளியிலிருந்து உதவி செய்துள்ளனர். அனைவரும் பாலக்காட்டை சேர்ந்தவர்கள்.

இந்த கொலைக்கு பின்னணியில் அரசியல் விரோதம்தான் காரணம் என தெரியவந்துள்து. மேலும் சஞ்ஜித்தை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய கும்பல் குறித்தும் விசாரித்து வருவதாக போலீசார் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us