பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு துாக்கு தண்டனை கோரி என்.ஐ.ஏ., மனு: 4 வாரங்களில் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு துாக்கு தண்டனை கோரி என்.ஐ.ஏ., மனு: 4 வாரங்களில் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
UPDATED : ஜன 29, 2026 04:44 AM
ADDED : ஜன 29, 2026 02:13 AM

புதுடில்லி: பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கியது தொடர்பான வழக்கில் கைதான காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை பதில் அளிக்கும்படி, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இவ்வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஏப்., 22ம் தேதிக்கு பட்டியலிட்டது.
ஜம்மு - காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் யாசின் மாலிக், பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரது ஜம்மு - காஷ்மீர் சுதந்திர முன்னணி அமைப்புக்கும் தடை விதிக்கப்பட்டது.
யாசின் மாலிக் மீதான வழக்கை விசாரித்த டில்லி நீதிமன்றம், அவருக்கு 2022, மே 24ல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை, 2023ல் டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
அதில், 'கொடூரமான பயங்கரவாதிகளுக்கு துாக்கு தண்டனை வழங்காவிட்டால், நீதித்துறையின் மீதான நம்பிக்கை சிதைந்து விடும். மேலும், தண்டனை வழங்கும் கொள்கையும் நீர்த்துப் போய்விடும். இதனால், பயங்கரவாதிகள் துாக்கு தண்டனையில் இருந்து தப்ப நேரிடும்.
'அரிதினும் அரிதான வழக்குகளின் பிரிவில் மாலிக்கின் குற்றங்கள் வரவில்லை எனக் கூறி, விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கிவிட்டது. இது சட்டப்படி தவறு' என, குறிப்பிடப்பட்டிருந்தது .
என்.ஐ.ஏ.,வின் இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு, 85 பக்க பிரமாண பத்திரத்தை மாலிக் பதிலாக தாக்கல் செய்தார். அதில், பள்ளி காலம் முதல், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பயங்கரவாதிகளுடனான தொடர்புகள் வரை விரிவாக விளக்கியுள்ளார். மேலும், அரசியலில் பலிகடா ஆக்கப்படுவது புதிது அல்ல எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ரவீந்தர் துடேஜா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டில்லி திஹார் சிறையில் இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆஜரான மாலிக், ''வழக்கை என்.ஐ.ஏ., வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறது,'' என குற்றஞ்சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''இது அவசர வழக்கு அல்ல. தண்டனையை அதிகரிக்க கோரும் வழக்கு. ஏற்கனவே உங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றனர்.
இதைத் தொடர்ந்து, என்.ஐ.ஏ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''மேல்முறையீட்டு மனு தொடர்பாக, வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத பதிலை பிரமாண பத்திரத்தில் மாலிக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது பதில் நீண்டதாக இருப்பதால், அதை படித்து பார்க்க அவகாசம் தேவைப்படுகிறது,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், என்.ஐ.ஏ., பதில் மனு தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பு தரப்படுவதாக தெரிவித்தனர். அதன்படி, நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்., 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

