கேரள நர்சை காப்பாற்ற ரூ.34.7 லட்சம் நிதி: மத்திய அரசு தகவல்
கேரள நர்சை காப்பாற்ற ரூ.34.7 லட்சம் நிதி: மத்திய அரசு தகவல்
ADDED : பிப் 14, 2025 04:01 PM

புதுடில்லி: ஏமனில் மரண தண்டனை பிடியில் உள்ள கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவை காப்பாற்ற, மத்திய அரசு 34.73 லட்சம் வழங்கி உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நர்ஸ் நிமிஷா பிரியா, 36. இவர் மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014ல், அவரது கணவர் மற்றும் பெண் குழந்தை இந்தியாவுக்கு திரும்பினர். அந்த ஆண்டில் ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டதால், நிமிஷா பிரியாவால் நாடு திரும்ப முடியவில்லை.
கடந்த 2017 ம் ஆண்டு ஏமனில் நர்சாக பணியாற்றிய போது, அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அது முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்நாட்டு சட்டப்படி, இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சு நடத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்கள் கேட்கும் பணத்தை நஷ்ட ஈடாக வழங்குவதுடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், மன்னித்தால் தண்டனை தள்ளுபடி செய்யப்பம் எனும் வழக்கம் உள்ளது. இதனை பயன்படுத்தி நிமிஷா பிரியாவை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த எம்.பி., ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் அளித்த பதில்: நிமிஷா பிரியாவை விடுதலை செய்வதற்காக மத்திய அரசு ரூ.34,73 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளது. இந்த பணம், ஏமனில் உயிரிழந்த நபரின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சிறையில் இருந்து நிமிஷா பிரியா விடுதலை செய்யப்படுவது என்பது இனிமேல், அவரின் குடும்பத்திற்கும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் இடையிலானது. அவரது தாயார் ஏமன் செல்லவும், வழக்கை நடத்த அந்நாட்டு வழக்கறிஞரை நியமிக்கவும் மத்திய அரசு உதவியது. இந்த விஷயம் உணர்ச்சிமிக்கது என்பதால், அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் எந்த பின்னடைவு ஏற்பட்டாலும், அதில் நிமிஷா பிரியாவின் விடுதலையில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.