நாடு கடத்தலுக்கு எதிரான மனு நிரவ் மோடிக்கு சிக்கல்
நாடு கடத்தலுக்கு எதிரான மனு நிரவ் மோடிக்கு சிக்கல்
ADDED : மார் 27, 2026 03:54 AM
புதுடில்லி: வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, 52, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் 2018ல் வெளிநாடு தப்பினார். அவரை, 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீசார் கைது செய்தனர். தற்போது பிரிட்டன் சிறையில் உள்ள அவரை நம் நாட்டிடம் ஒப்படைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
முன்னதாக நிரவ் மோடி, 'இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் சிறையில் கொடுமைப்படுத்துவர்; நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது பாதுகாப்பு இருக்காது' என குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, 'மும்பை ஆர்தர் ரோடு சிறையில் நிரவ் மோடி வைக்கப்படுவார். சட்ட உதவி வழங்கப்படும். சிறை அறை சுகாதாரமான முறையில் இருக்கும். பாதுகாப்பு வழங்கப்படும்' என, பிரிட்டன் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உறுதிமொழி அளித்தது.
இந்நிலையில், இந்தியாவிடம் ஒப்படைக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க நிரவ் மோடி மனு தாக்கல் செய்திருந்தார். இந்தியாவின் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறிய பிரிட்டன் நீதிமன்றம், நிரவ் மோடியின் மனுவை நிராகரித்தது.
