பீஹாரில் மீண்டும் நிதிஷ் ஆட்சி: வெளியானது புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள்
பீஹாரில் மீண்டும் நிதிஷ் ஆட்சி: வெளியானது புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள்
ADDED : செப் 29, 2025 07:02 PM

புதுடில்லி: பீஹாரில் மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சியை பிடிப்பார் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்திருக்கிறது.
பீஹாரில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.
தேர்தலை மையப்படுத்தி, ஓட்டு போடுபவர்களை கவரும் வகையில் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கி இருக்கின்றன.
இந் நிலையில், பீஹாரில் யார் மகுடம் சூடுவார்கள் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இதிலும், நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கருத்துக்கணிப்பை JVC என்ற நிறுவனமும், டைம்ஸ் நவ் நிறுவனமும் இணைந்து நடத்தி முடிவுகளை வெளியிட்டு இருக்கின்றன.
அந்த முடிவுகளின் விவரம் பின்வருமாறு:
தேசிய ஜனநாயக கூட்டணி - 131 முதல் 150 இடங்கள் வரை வெல்லும் (பெறக்கூடிய ஓட்டு சதவீதம் 41 முதல் 45 வரை)
இதில் நிதிஷ்குமார் கட்சிக்கு 52 முதல் 58 இடங்கள், பாஜவுக்கு 66 முதல் 77 இடங்கள் கிடைக்கலாம். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு 13 முதல் 15 இடங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
எதிர்க்கட்சிகள் கூட்டணி; 81 இடங்கள் முதல் 103 இடங்கள் வரை (ஓட்டு சதவீதம் 37 முதல் 40 வரை)
லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 57 முதல் 71 இடங்களும், காங்கிரசுக்கு 11 முதல் 14 இடங்களும் கிடைக்கலாம். மற்ற கட்சிகள் 13 முதல் 18 இடங்களை பெறலாம்.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு 4 முதல் 6 இடங்கள், ஓவைசி கட்சி, பகுஜன் சமாஜ் மற்றும் இன்னபிற கட்சிகளுக்கு 5 முதல் 6 இடங்கள் கிடைக்கலாம்.
இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழக்கக்கூடிய தொகுதிகளில், முக்கிய காரணியாக இருப்பது ஜன் சுராஜ் கட்சி. ஒட்டு மொத்த ஓட்டு பதிவில் இந்த கட்சிக்கு 10 முதல் 11 சதவீதம் வரை கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இந்த கருத்துக்கணிப்பானது செப்.1ம் தேதி முதல் செப்.25ம் தேதி வரை எடுக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.