சிறைகளில் ஜாதி பாகுபாடு கூடாது: விதிகளை திருத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சிறைகளில் ஜாதி பாகுபாடு கூடாது: விதிகளை திருத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ADDED : அக் 04, 2024 12:01 AM

புதுடில்லி: தமிழகம் உட்பட 11 மாநில சிறைகளில் கைதிகளுக்கு, ஜாதி அடிப்படையில் பணிகளும், அறைகளும் ஒதுக்கப்படுவதை கண்டித்த உச்ச நீதிமன்றம், அதை ஊக்குவிக்கும் சிறை கையேட்டை மூன்று மாதங்களுக்குள் திருத்தும்படி மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.
மஹாராஷ்டிராவின் கல்யாண் பகுதியைச் சேர்ந்த சுகன்யா சாந்தா என்பவர், சிறைகளில் ஜாதி அடிப்படையில் கைதிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதன் விபரம்:
சில மாநிலங்களின் சிறைகளில், குறிப்பிட்ட பழங்குடியின சமூகத்தினருக்கும், தொடர் குற்றப் பின்னணி உடைய நபர்களுக்கும் சிறைப்பணி ஒதுக்கீட்டில் ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது.
குறிப்பாக தமிழகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, ஜார்க்கண்ட், கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநில சிறைக் கையேடுகள், கைதிகளுக்கான பணி ஒதுக்கீட்டில் ஜாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன.
மேலும் சிறைக் கைதிகளுக்கு ஜாதி அடிப்படையில் அறைகள் ஒதுக்கப்படுகின்றன. எனவே, சிறைக் கையேடுகளில் இடம்பெற்றுள்ள தவறான விதிகளை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு மற்றும் 11 மாநில அரசுகளும் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது.
வழக்கு தொடர்பான வாதங்கள் முடிவடைந்த நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
அதன் விபரம்:
சிறையில் ஜாதியை வைத்து பாகுபாடு காட்டக்கூடாது. அவ்வாறு நடந்தால் அதற்கு மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
எஸ்.சி., - எஸ்.டி., உள்ளிட்ட விளிம்புநிலை மக்களை சிறையில் பாகுபாடுடன் நடத்தக்கூடாது.
துப்பரவு பணிகளை விளம்புநிலையில் உள்ள கைதிகளுக்கு வழங்குவது, சமையல் உள்ளிட்ட பணிகளை உயர் ஜாதியினருக்கு ஒதுக்கும் செயல் அரசியல் சாசன சட்டத்தின் 15வது பிரிவை மீறுவதாகும்.
எந்த ஜாதியினரும் துப்புரவு பணி செய்வதற்காக பிறப்பதில்லை. யார் சமையல் செய்ய வேண்டும், யார் செய்யக்கூடாது என பிரிப்பது தீண்டாமையை ஊக்குவிக்கும் செயல்.
இதை அனுமதிக்க முடியாது. சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை சிறைக் கைதிகளுக்கு வழங்க கூடாது.
ஜாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் விதமாக இயற்றப்பட்டுள்ள சிறை விதிகளில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மூன்று மாதங்களுக்குள் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

