ADDED : பிப் 12, 2024 06:55 AM

ஹாவேரி: ''கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை'' என்று, அக்கட்சியின் எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறி உள்ளார்.
விஜயபுரா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால். எடியூரப்பா, விஜயேந்திராவை விமர்சித்து பேசி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, எத்னால், விஜயேந்திரா ஆகியோர், ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியானது. இதனால் அவர்கள் இருவரும், சமாதானம் ஆகிவிட்டனர் என்றும் தகவல் வெளியானது.
இதுகுறித்து, ஹாவேரியில் எத்னால் நேற்று அளித்த பேட்டி:
விஜயேந்திராவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எனக்கும், அவருக்கும் எந்த தொழில்ரீதியான நட்பும் இல்லை. தந்தை, மகனுடன் எதற்காக நான் சமரசம் செய்ய வேண்டும். மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை சந்திக்க சென்றேன். அப்போது விஜயேந்திராவும் அங்கு வந்தார். அவ்வளவு தான்.
மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். அது தான் எனது எண்ணம். சோமண்ணா, பசவராஜ் பொம்மையை தோற்கடிக்க, விஜயேந்திரா என்னென்ன செய்தார் என்று எனக்கு தெரியும். லோக்சபா தேர்தலுக்கு பின், அவரை பற்றிய உண்மைகளை வெளியிடுவேன்.
பிரதமர் மோடி தலைமையில், தேர்தலுக்கு செல்கிறோம். விஜயேந்திரா மாநில தலைவராக இல்லாவிட்டாலும், கர்நாடகாவில் பா.ஜ., வெற்றி பெறுவது உறுதி. நாங்கள் 'ஆப்பரேஷன் தாமரை' செய்ய தேவை இல்லை.
காங்கிரசில் அதிருப்தி நிலவுகிறது. சித்தராமையாவை வீழ்த்த, காங்கிரசில் ஒரு கோஷ்டி உருவாகும். சிவகுமார் முதல்வரானால், மாநிலத்தின் நிலை என்ன ஆகும் என்று பயமாக உள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.