ராகுல் எத்தனை யாத்திரை நடத்தினாலும் ஊடுருவல்காரர்களை பாதுகாக்க முடியாது: அமித்ஷா
ராகுல் எத்தனை யாத்திரை நடத்தினாலும் ஊடுருவல்காரர்களை பாதுகாக்க முடியாது: அமித்ஷா
ADDED : நவ 09, 2025 06:26 PM

சசாராம்: '' பாட்னாவில் இருந்து இத்தாலி வரை ராகுல் எத்தனை யாத்திரை நடத்தினாலும் காங்கிரஸ் எம்பி ராகுலால் ஊடுருவல்காரர்களை காப்பாற்ற முடியாது. அவருக்கு பீஹார் இளைஞர்களை பற்றி கவலையில்லை,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
பீஹார் சட்டசபைக்கு 2ம் கட்ட தேர்தலை முன்னிட்டு சசாரம் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: சோனியா, மன்மோகன், லாலு அதிகாரத்தில் இருந்த போது, நமது மண்ணில் தாக்குதல் நடத்திவிட்டு பயங்கரவாதிகள் தப்பியோடினர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான், உரியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது. புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தினாம். பஹல்காமில், நமது மக்களை , மதத்தைக் கேட்டு பயங்கரவாதிகள் கொன்றதும் அடுத்த 22 நாட்களில் ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை கொன்றோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஊடுருவல்காரர்களை காப்பாற்ற யாத்திரை ஒன்றை ராகுல் மேற்கொண்டார். அவர் விரும்பினால், பாட்னாவில் இருந்து இத்தாலி வரை எத்தனை யாத்திரை வேண்டுமானாலும் நடத்தட்டும். ஆனால், அவரால் ஊடுருவல்காரர்களை காப்பாற்ற முடியாது. பீஹார் மற்றும் நாட்டில் இருந்து அனைத்து ஊடுருவல்காரர்களை யும் கண்டுபிடித்து வெளியேற்றுவோம். பீஹார் இளைஞர்களை காட்டிலும், வங்கதேச ஊடுருவல்காரர்களை நினைத்து ராகுல் கவலைப்படுகிறார். வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல்காரர்கள் நீக்கப்பட்டதால், ஓட்டுத் திருட்டு குறித்து ராகுல் பேசி வருகிறார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

