இனி 'சிசிடிவி'யே இருக்க கூடாது: கடைகளுக்கு திருடர்கள் மிரட்டல்
இனி 'சிசிடிவி'யே இருக்க கூடாது: கடைகளுக்கு திருடர்கள் மிரட்டல்
ADDED : அக் 03, 2024 11:48 PM

சாம்ராஜ்நகர்: கடைகளில் கொள்ளையடித்த மர்ம நபர்கள், 'கண்காணிப்பு கேமராக்களை அகற்றி விடுங்கள். இல்லையெனில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று மிரட்டல் கடிதம் எழுதி வைத்துச் சென்றது, கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள புவனேஸ்வரி நகர் பகுதிகளில் ஏராளமான வர்த்தக கடைகள் அமைந்துள்ளன.
இங்குள்ள ஸ்வாகத் டிரேடர்ஸ், பிரபு எலக்ட்ரிக்கல், வினய் ஆட்டோ மொபைல்ஸ் உட்பட பல்வேறு கடைகளுக்குள், நேற்று முன்தினம் நள்ளிரவு பூட்டை உடைத்து புகுந்த திருடர்கள், கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தினர்.
பின், அங்கிருந்த பொருட்கள், ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
கடைகளுக்கு நேற்று காலை வந்த உரிமையாளர்கள், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சாம்ராஜ் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாருடன் தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர்.
அங்கு, திருடர்கள் விட்டுச் சென்ற கடிதம் ஒன்று இருந்தது. அதில், 'உங்கள் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அகற்றி விடுங்கள். இல்லையெனில் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனால், கடை உரிமையாளர்கள் பீதியில் உள்ளனர்.
'கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

