இந்தியாவை யாராலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி
இந்தியாவை யாராலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி
ADDED : ஆக 10, 2025 02:55 PM

போபால்: '' உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ம.பி., மாநிலம் ரைசன் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியா வேகமாக வளர்ச்சி பெறுவதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் அதனை விரும்பவில்லை. எப்படி இந்தியா வேகமாக முன்னேறலாம் என கேள்வி கேட்கின்றனர். இந்தியர்களின் கைகளால், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை, மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களை விட அதிகமானதாக இருக்க வேண்டும் என பலர் முயற்சி செய்கின்றனர். இதனால், பொருட்கள் விலை உயர்ந்தால் அவற்றை உலக நாடுகள் வாங்காது என நினைக்கின்றனர். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், இந்தியா வேகமாக முன்னேறுகிறது. உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது என்பதை உறுதியுடன் கூறுகிறேன். பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்து 24 நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறோம். இது தான் இந்தியாவின் பலம். அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் மதத்தை கேட்டு கொன்றனர். ஆனால், நாம் யாரின் மதத்தையும் கேட்காமல் கொல்வது என முடிவு செய்தோம். பயங்கரவாதிகள் செய்த செயலை பார்த்து நாம் அவர்களை கொன்றோம். இவ்வாறு அவர் பேசினார்.