ADDED : மார் 05, 2024 01:06 AM
உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அமர்வு, 135 பக்க தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் என்பது, ஒட்டுமொத்த சபைக்கானது. தனிப்பட்ட முறையில் ஒருவருக்கானது அல்ல. கூட்டாக இணைந்து செயல்படுவதற்காகவே, இந்த சட்ட பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன
அந்த சிறப்பு உரிமைகள் என்பது, குறிப்பிட்ட சபையின் நடவடிக்கைகள் இணக்கமாகவும், சுமுகமாகவும் நடப்பதற்காகவே அளிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில், சபைக்கு எதிராக செயல்படும்போது, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் இந்த சிறப்புரிமைகள் கோர முடியாது
உயர்ந்த நோக்கத்துடன் தான், பார்லிமென்ட், சட்டசபைகளுக்கு சில அதிகாரங்கள், சலுகைகள், சிறப்புரிமைகளை, நம் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ளது. இதையே வைத்து, சபைக்கு பொருந்தாத அல்லது எதிரான செயல்களுக்கு சட்ட பாதுகாப்பை உறுப்பினர்கள் கோர முடியாது
இந்த சிறப்புரிமைகள் இரண்டடுக்கு பரிசோதனைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். முதலில், எந்த ஒரு நடவடிக்கையும், சபையின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கானதாக இருக்க வேண்டும். இரண்டாவது, மக்கள் பிரதிநிதியாக ஒருவர் சிறப்பாக செயல்படுவதற்கு தேவையானதாக இருக்க வேண்டும்
ஒரு சட்டசபையோ அல்லது பார்லிமென்டோ, தனி உறுப்பினர்களால் அமைந்ததல்ல. அது ஒரு கூட்டு அமைப்பாகும்
ஒரு சிறந்த ஜனநாயகத்தில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடியதாக, அவை தொடர்பாக விவாதிக்கக் கூடியதாக ஜனநாயக அமைப்புகள் இருக்க வேண்டும். அதில், சட்டசபை மற்றும் பார்லிமென்ட் முதன்மையான இடத்தில் உள்ளன
ஜனநாயகத்துக்கு உயிர் கொடுக்கும் வகையிலும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும், சபைகளின் அலுவல்கள், விவாதங்கள், வாக்குவாதங்கள் இருக்க வேண்டும்
இவை குறையும்போது, மக்கள் அந்தப் பொறுப்பை, கடமையை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். சபைகளின் செயல்பாடுகள் குறித்து அவற்றுக்கு வெளியே மக்கள் விமர்சிப்பது அல்லது வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவர்
சபைகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டியது, அதன் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டியது, அதில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் பொறுப்பாகும். இதற்காகவே, சில சிறப்புரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதுவும் ஒட்டுமொத்த சபையின் சிறப்பான செயல்பாட்டுக்காக
சபையில் பேசுவதற்கு அல்லது ஓட்டளிக்க லஞ்சம் வாங்குவது என்பது, சபையின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கு எதிரானது. இதில் ஈடுபடுவோர், சிறப்புரிமையை கோர முடியாது.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

