அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதிக்கு 'நோட்டீஸ்'
அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதிக்கு 'நோட்டீஸ்'
ADDED : ஜூலை 06, 2025 11:08 PM

புதுடில்லி: ஓய்வுபெற்ற பின்பும் அரசு பங்களாவில் வசிக்கும் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டை, மீண்டும் நீதிமன்ற குடியிருப்புக்கு அனுப்புமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம் எழுதியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய சந்திரசூட், கடந்தாண்டு நவம்பர் 10ம் தேதி ஓய்வு பெற்றார். பதவிக்காலத்தில், அவருக்கு டில்லி கிருஷ்ணன்மேனன் சாலையில் உள்ள அரசு பங்களா ஒதுக்கப்பட்டது.
அனுமதி
விதிமுறைகளின்படி, தலைமை நீதிபதிக்கு எட்டா-வது வகை பங்களா ஒதுக்கப்படும். ஓய்விற்கு பின் அடுத்த ஆறு மாதங்களுக்கு, வாடகையற்ற ஏழா-ம் வகை பங்களாவிற்கு அவர்கள் மாற்றப்படுவர்.
ஆனால், ஓய்வுபெற்ற பின்பும் கூட, எட்டாம் வகை பங்களாவில் சந்திரசூட் தங்கியுள்ளார்.
அவருக்கு பின் தலைமை நீதிபதி பொறுப்பேற்ற சஞ்சீவ் கன்னா, தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோர், முன்பு இருந்த வீட்டிலேயே இருந்து கொள்வதாக கூறியதே இதற்கு காரணம்.
இதற்கிடையே, இந்தாண்டு ஏப்ரல் வரை அரசு பங்களாவில் இருக்க சந்திரசூட் அனுமதி கோரியிருந்தார். இதற்கு ஒப்புக்கொண்ட மத்திய அரசு, அவரிடம் மாதந்தோறும் 5,430 ரூபாயை உரிமம் தொகையாக வாங்கியது.
இந்த சூழலில், அந்த பங்களாவில் வசிக்க, அவர் மேலும் ஒரு மாதம் அனுமதி கோரியிருந்தார். இருப்பினும், இதுவரை அந்த பங்களாவில் இருந்து சந்திரசூட் காலி செய்யவில்லை.
இந்நிலையில், பங்களாவை காலி செய்து அவரை நீதிமன்ற குடியிருப்புக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 1ல், மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு எழுதப்பட்ட கடிதத்தில், 'விதிமுறைகளின்படி, அரசு பங்களாவில் சந்திரசூட் தங்குவதற்கான கால அவகாசம் மே 10ம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது கோரிக்கையை ஏற்று வழங்கப்பட்ட அவகாசமோ, மே 31ம் தேதியுடன் முடிவடைந்தது.
கடிதம்
'ஆனால், அவர் இன்னும் அரசு பங்களாவை காலி செய்யவில்லை. மேலும் கால அவகாசம் கோராத நிலையில், சந்திரசூட் விரைவில் பங்களாவை காலி செய்ய வைத்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34. தற்போது, தலைமை நீதிபதி உட்பட 33 நீதிபதிகள் உள்ள நிலையில், நான்கு பேருக்கு அரசு பங்களா ஒதுக்கப்படாமல் உள்ளது.
அவர்களுக்கு இடவசதி செய்து தர வேண்டும் என்பதாலேயே, சந்திரசூட் வெளியேற வலியுறுத்தி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம் எழுதிஉள்ளதாக கூறப்படுகிறது.

