ADDED : செப் 22, 2025 04:49 AM

புதுடில்லி: செய்தி ஒளிபரப்பில், உருது மொழியை அதிகளவு பயன்படுத்தியது தொடர்பாக ஹிந்தி ஊடக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில், கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ், சில ஹிந்தி ஊடகங்களுக்கு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், 'உங்கள் ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்ட செய்தி நிகழ்ச்சிகளில் அதிகளவு உருது மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி பார்வையாளர் புகார் அளித்துள்ளனர். உங்களின் நடவடிக்கை விதிமுறைகளை மீறிய செயலாக இது கருதப்படுகிறது' என, குறிப்பிடப் பட்டிருந்தது.
இதுகுறித்து பி.ஐ.பி., எனப்படும் பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சரிபார்ப்புப் பிரிவு கூறுகையில், ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பவில்லை என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அப்பிரிவு வெளியிட்ட பதிவில், 'ஹிந்தி ஊடக நிறுவனங்களில் ஒளிப்பரப்பான செய்திகள் தொடர்பாக பார்வையாளர் ஒருவர் அளித்த புகாரை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பியது மட்டுமே எங்களது பணி. இது, அமைச்சகத்தின் உத்தரவு அல்ல' என, குறிப்பிட்டுள்ளது.