பிச்சை எடுக்கும் சிறார்கள் அதிகரிப்பு 'ஒடனாடி' தொண்டு நிறுவனம் கவலை
பிச்சை எடுக்கும் சிறார்கள் அதிகரிப்பு 'ஒடனாடி' தொண்டு நிறுவனம் கவலை
ADDED : மார் 27, 2025 05:29 AM
பெங்களூரு: கர்நாடகாவில் பிச்சை எடுக்கும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மைசூரில் இயங்கும், 'ஒடனாடி சேவை மையம்' சிறார்கள், பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கிறது. கர்நாடகாவில் பிச்சை எடுக்கும் சிறார்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சிறார்கள் நலன் இயக்குநரகத்திடம் தகவல் கோரியது.
இயக்குநரகம், அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளின் அலுவலகத்தில் இருந்து தகவல் சேகரித்து, ஒடனாடி சேவை மையத்திடம் அளித்துள்ளது.
சிறார்கள் நலன் இயக்குநரகம் அளித்த தகவலின்படி, 2021 முதல் 2023 வரை மாநிலத்தில், 1,347 சிறார்கள் பிச்சை எடுத்தனர். இவர்களில் 632 பேர், சிறுமியர். இவர்களை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டாலும், அந்த சிறுவர், சிறுமியர் மீண்டும் பிச்சையெடுக்க செல்கின்றனர்.
ஒடனாடி சேவை மையத்தின் இயக்குநர் பரசுராம் கூறியதாவது:
மைசூரு உட்பட, பல்வேறு நகரங்களின் டிராபிக் சிக்னல்களில், சிறார்கள் பிச்சை எடுக்கின்றனர். சில பெண்கள் பச்சிளம் குழந்தைகளை இடுப்பில் அமர்த்தியபடி பிச்சை எடுப்பதை காண முடிகிறது.
சில சிறார்கள் சிறிய கூடையில் கடவுள் படங்கள் அல்லது விக்ரகங்கள் வைத்துக் கொண்டு, பணம் கேட்கின்றனர். சிலரின் கை, கால்களில் காயங்கள் தென்படுகின்றன.
குழந்தை பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக்குவது, தன் குறிக்கோள் என, அரசு கூறுகிறது. குழந்தைகள் நலத்துறையும் கூறுகிறது. ஆனால் பிச்சை எடுக்கும் சிறார்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகம். மீட்கப்படும் சிறார்கள், பெற்றோரிடம் சேர்க்கப்படுகின்றனர். ஆனால் இயலாமையால் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் மீண்டும் பிச்சை எடுக்க அனுப்புகின்றனர்.
இது போன்று பிச்சை எடுக்க வரும் சிறுமியர், பலாத்காரத்துக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. எனவே சிறுமியரை மீட்டால் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். பிச்சை எடுக்கும் சிறார்களுக்கு மறு வாழ்வு ஏற்படுத்தி தருவது அவசியம்.
சிறார்களை மீட்டு, பிச்சையெடுக்க விடுவோரிடமே ஒப்படைப்பதால், எந்த பயனும் இல்லை.
பிச்சையெடுக்கும் சிறார்கள் நாளடைவில், போதைப் பொருள் பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இவர்களின் பெற்றோருக்கு, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மறு வாழ்வு மையங்களை நடத்த, உள்ளாட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
பிச்சை எடுப்பதில் இருந்து சிறார்களை மீட்பதை விட, அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி தருவதே முக்கியம்.
பொறுப்பில்லாத பெற்றோரால், சிறார்களின் எதிர்காலம் பாழாகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.