மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் கர்நாடக அரசு ஊழியர்களுக்கு 'ஜாக்பாட்'
மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் கர்நாடக அரசு ஊழியர்களுக்கு 'ஜாக்பாட்'
ADDED : ஜன 25, 2024 01:33 AM
பெங்களூரு, கர்நாடக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியாக காங்., அறிவித்திருந்தது.
இதன்படி, ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களுக்கு பின், பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக கர்நாடக அரசு நேற்றிரவு உத்தரவிட்டது.
இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையா வெளியிட்ட அறிக்கையில், 2006 மார்ச் 31ம் தேதிக்குள் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மட்டும் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது.
அதன்பின் புதிய பென்ஷன் திட்டம், நாடு முழுதும் அமலுக்கு வந்தது. தற்போது, நாங்கள் அளித்த வாக்குறுதியின்படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி உள்ளோம்.
இதன் வாயிலாக, 2006 ஏப்., 1 முதல் இதுவரை பணியில் சேர்ந்த 13,000 அரசு ஊழியர்கள் பயன்பெறுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அரசு ஊழியர்கள் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் புதியபென்ஷன் திட்டத்தில் இருந்து பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றிக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்காதவர்களுக்கு புதிய பென்ஷன் திட்டமே தொடரும்.