உத்தரகண்டில் 20 பேருடன் சென்ற சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்தது;3 பேர் உயிரிழப்பு; தேடும் பணி தீவிரம்
உத்தரகண்டில் 20 பேருடன் சென்ற சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்தது;3 பேர் உயிரிழப்பு; தேடும் பணி தீவிரம்
UPDATED : ஜூன் 26, 2025 11:51 PM
ADDED : ஜூன் 26, 2025 10:05 AM

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயம் அடைந்தனர். மாயமான 10 பேரை தேடும் பணி நடக்கிறது.
உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டம் கோல்திர் பகுதியில் 20 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ் அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் மாயமான 10 பேரை தேடும் பணி நடக்கிறது.
இது குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது: ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஒரு டெம்போ டிராவலர் ஆற்றில் விழுந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மீட்பு படையினரால் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக உள்ளூர் நிர்வாகத்துடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.