ADDED : டிச 10, 2024 12:30 AM
புதுடில்லி: நம் நாட்டில் லோக்சபா தேர்தலுடன், அனைத்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் வகையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவை மத்திய அரசு அமைத்தது.
சமீபத்தில், இந்த குழு தன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்த நிலையில், அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது நடந்து வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரிலேயே, ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில், அனைத்து கட்சியினரிடமும் ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய அரசு விரும்புவதால், இந்த மசோதா மீதான விரிவான ஆலோசனைக்காக பார்லிமென்ட் கூட்டுக்குழுவிற்கு அனுப்பவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர, பொதுமக்களின் கருத்துக்களை பெற்று, விரைவில் இந்த மசோதாவை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது.