சம வாய்ப்பு வழங்க தேர்தல் நடத்தை விதிமுறைகள் அவசியம்: அடித்து சொல்கிறது தேர்தல் கமிஷன்!
சம வாய்ப்பு வழங்க தேர்தல் நடத்தை விதிமுறைகள் அவசியம்: அடித்து சொல்கிறது தேர்தல் கமிஷன்!
UPDATED : ஜன 13, 2025 06:57 AM
ADDED : ஜன 13, 2025 06:50 AM

புதுடில்லி: தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்க தேர்தல் நடத்தை விதிமுறைகள் அவசியம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவதால், வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அவசியம் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. மேலும் மத்திய அரசு கூறியதாவது: தேர்தல்களை நடத்துவதில் அதிக செலவு மற்றும் நேரம் வீணாகி வருகிறது. இது மட்டுமின்றி தேர்தல்களின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் கமிஷன் அமல்படுத்துகிறது.
விதிமுறைகளை அமல்படுத்துவதால், அரசின் சேவைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றைத் தடுக்கும் நோக்கில், ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது அவசியமாகிறது. இவ்வாறு மத்திய அரசு கூறியிருந்தது. இது தொடர்பாக சட்ட ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்குத் தேர்தல் கமிஷன் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது அவசியம். தேர்தல்களை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும். நம்பகமான முடிவுகளை பெறுவதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.