ADDED : அக் 11, 2024 07:10 AM
பெங்களூரு: காசோலை மோசடி வழக்கில் ஒருவருக்கு 2.50 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.
தட்சிண கன்னடா பன்ட்வாலின் புது கிராமத்தில் வசிப்பவர் ஹசனப்பா, 40. இவர் தட்சிண கன்னடா மாவட்ட கூட்டுறவு வங்கியின் பரங்கிபேட்டை கிளையில், 2012ல் தன் சொத்துகளை அடமானம் வைத்து, 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இதை அடைக்காமல் இழுத்தடித்தார்.
பல முறை கேட்டும் பொருட்படுத்தவில்லை. எனவே ஹசனப்பா மீது வங்கி சட்ட ரீதியில் நடவடிக்கையில் இறங்கியது.
கடந்த 2019ல் அவரது சொத்துகளை ஏலம் விட முடிவு செய்தது. அப்போது வங்கிக்கு வந்த ஹசனப்பா, கடன் தொகைக்கான காசோலை கொடுத்தார். இந்த காசோலை 'பவுன்ஸ்' ஆனது.
இது தொடர்பாக, பன்ட்வாலின், சிவில் மற்றும் ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில், வங்கி அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். விசாரணைக்கு ஆஜரான ஹசனப்பா, 'நான் வங்கியில் எந்த கடனும் வாங்கவில்லை; காசோலையும் அளிக்கவில்லை; நான் கடன் பாக்கியும் வைக்கவில்லை. ஆனால் வங்கி அதிகாரிகள், எனக்கு உடல் ரீதியாக, மன ரீதியாக தொல்லை கொடுக்கின்றனர்' என குற்றஞ்சாட்டினார்.
இவர் கடன் வாங்கிய போது, தாக்கல் செய்த ஆவணங்கள், தன் சொத்தை வங்கி ஏலத்துக்கு வைத்த போது, அளித்திருந்த வேண்டுகோள் கடிதத்தை வங்கி அதிகாரிகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதை ஆய்வு செய்த நீதிமன்றம், ஹசனப்பாவை குற்றவாளி என, உறுதி செய்தது.
அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. வங்கிக்கு 2.50 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என, ஹசனப்பாவுக்கு உத்தரவிட்டது.