ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தவிர்க்க முடியாதது; மிகவும் அவசியமானது: மோகன் பகவத் உறுதி
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தவிர்க்க முடியாதது; மிகவும் அவசியமானது: மோகன் பகவத் உறுதி
ADDED : மே 09, 2025 01:42 PM

புதுடில்லி: ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தவிர்க்க முடியாதது. இது மிகவும் அவசியமானது'' என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நடவடிக்கை எடுத்த மத்திய அரசையும், ஆயுதப் படைகளையும் நாங்கள் பாராட்டுகிறோம்.
ஹிந்து சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், முழு நாட்டிற்கும் நீதி வழங்குவதற்கான இந்த நடவடிக்கை மன உறுதியை அளிக்கிறது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கை நாட்டின் பாதுகாப்பிற்கு அவசியம் ஆகும்.
மிகவும் அவசியம்
இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாதது. மிகவும் அவசியமானது. தேசிய நெருக்கடியின் இந்த நேரத்தில், முழு நாடும் மத்திய அரசிற்கும், ஆயுத படைகளுக்கும் ஆதரவாக இருக்கும். இந்திய எல்லை பகுதிகளில் உள்ள மத வழிபாட்டு இடங்கள் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் தாக்குதல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
அறிவுறுத்தல்கள்
இந்த காட்டுமிராண்டித்தனமான, மனிதாபிமானமற்ற தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த சவாலான நேரத்தில், அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நல்லிணக்கம்
சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதில் தேச விரோத சக்திகளின் எந்தவொரு சதித்திட்டமும் வெற்றி பெறக்கூடாது. அனைத்து குடிமக்களும் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்த வேண்டும். ராணுவத்திற்கும், அரசிற்கும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தேசிய ஒற்றுமை மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.