sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 வங்கதேச விவகாரத்தில் அரசுடன் எதிர்க்கட்சிகள்... கைகோர்ப்பு! ஷேக் ஹசீனாவுக்கு உதவ ஒருமித்த ஆதரவு

/

 வங்கதேச விவகாரத்தில் அரசுடன் எதிர்க்கட்சிகள்... கைகோர்ப்பு! ஷேக் ஹசீனாவுக்கு உதவ ஒருமித்த ஆதரவு

 வங்கதேச விவகாரத்தில் அரசுடன் எதிர்க்கட்சிகள்... கைகோர்ப்பு! ஷேக் ஹசீனாவுக்கு உதவ ஒருமித்த ஆதரவு

 வங்கதேச விவகாரத்தில் அரசுடன் எதிர்க்கட்சிகள்... கைகோர்ப்பு! ஷேக் ஹசீனாவுக்கு உதவ ஒருமித்த ஆதரவு


ADDED : ஆக 07, 2024 02:16 AM

Google News

ADDED : ஆக 07, 2024 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வங்கதேசத்திலிருந்து தப்பி வந்து தஞ்சம் அடைந்துள்ள, அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக, அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பதாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வாக்குறுதி அளித்துள்ளன.

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் குழப்பம் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு நேற்று அழைப்பு விடுத்தது.

பாதுகாப்பு


பார்லிமென்ட்டில் உள்ள அரங்கில் நடந்து இந்த கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா, தி.மு.க., - எம்.பி., பாலு, தேசியவாத காங்., - எம்.பி., சுப்ரியா சுலே, திரிணமுல் காங்., - எம்.பி., சுதீப் பந்தோபாத்யா, ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி., மிஸா பாரதி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.

வங்கதேசத்தில் நிலவும் சூழல் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் விரிவாக விளக்கினார்.

அங்கு வசிக்கும் 10,000 இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி அந்நாட்டு ராணுவ தளபதியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தியர்களை பாதுகாப்பதும், நாடு திரும்ப விருப்பம் உள்ளவர்களை பத்திரமாக அழைத்து வருவதற்குமான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை செய்து வருவதாக அவர் கூறினார்.

தவிர, அந்நாட்டின் அரசியல் நிலைமை இந்த அளவு உச்சகட்டத்தை எட்டியதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும் எம்.பி.,க்களுக்கு விளக்கப்பட்டது.

இது தவிர, பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டவுடன், ஷேக் ஹசீனா அங்கிருந்து எவ்வாறு தப்பி இந்தியா வந்தார், அவருடைய வீட்டை கலவரக்காரர்கள் எவ்வாறு முற்றுகையிட்டனர் என்பது உட்பட அனைத்து விபரங்களும் விவாதிக்கப்பட்டன.

ஷேக் ஹசீனா நம் நாட்டில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பதை கூறிய மத்திய அரசு, லண்டனுக்கு விரைவில் அரசியல் அடைக்கலம் கேட்டு செல்ல அவர் விருப்பமாக உள்ளதாகவும் தெரிவித்தது.

அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளின் அதிர்ச்சியில் இருந்து ஹசீனா இன்னும் மீளவில்லை என்றும், அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதும் அவரது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவரிடம் கேட்டறிய கால அவகாசம் வழங்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஹசீனாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வங்கதேசத்தில் 20,000க்கும் அதிகமான இந்தியர்கள் இருந்தனர். அவர்களில், 8,000 பேர் நாடு திரும்பிவிட்டனர். அங்குள்ள இந்தியர்கள், இந்திய துணைத் துாதரகத்துடன் தொடர்பில் உள்ளனர் என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வங்கதேசத்தின் சில பகுதிகளில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் தாக்கப்படுவதையும் மத்திய அரசு தொடர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்து உள்ளது.

ஆம் ஆத்மிக்கு 'நோ'


அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என, அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் நேற்று குற்றஞ்சாட்டினார்.

''தேசிய பாதுகாப்பு தொடர்பான எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க தேசிய கட்சியான ஆம் ஆத்மிக்கு அழைப்பு இல்லை. எங்களுக்கு 13 எம்.பி.,க்கள் உள்ளனர்.

''அப்படியிருந்தும் எங்களை அழைக்காதது அரசின் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது,'' என்றார்.

ஆம் ஆத்மிக்கு அழைப்பில்லை!

அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என, அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் நேற்று குற்றஞ்சாட்டினார்.''தேசிய பாதுகாப்பு தொடர்பான எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க தேசிய கட்சியான ஆம் ஆத்மிக்கு அழைப்பு இல்லை. எங்களுக்கு 13 எம்.பி.,க்கள் உள்ளனர். அப்படியிருந்தும் எங்களை அழைக்காதது அரசின் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது,'' என்றார்.



லண்டன் செல்வதில் சிக்கல்!

பிரிட்டன் தலைநகர் லண்டனில் அகதியாக தஞ்சம் அடைய ஷேக் ஹசீனா திட்டமிட்டு உள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் இந்தியாவில் இருந்து அவர் புறப்படுவார் என்றும் கூறப்படுகிறது.ஹசீனாவின் சகோதரி ஷேக் ரெஹானாவின் மகள் துலிப் சித்திக், பிரிட்டன் குடியுரிமை பெற்றவர். அந்நாட்டின் ஆளும் தொழிலாளர் கட்சியின் எம்.பி.,யாக உள்ளார். ரெஹானாவுக்கும் பிரிட்டன் குடியுரிமை உள்ளது. எனவே, ஷேக் ஹசீனா லண்டனில் அகதியாக தங்க அனுமதி பெற்று சகோதரியுடன் வசிக்க திட்டமிட்டுள்ளார்.ஆனால், இந்த விவகாரத்தில் சில குழப்பங்கள் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. ஷேக் ஹசீனா லண்டனில் தங்குவதாக இருந்தால், அது அவருக்கு சட்டப்படியான பாதுகாப்பான இடமாக இருக்காது என, பிரிட்டன் அரசு கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஹசீனாவுக்கு எதிராக வங்கதேசத்தில் விசாரணை நடக்கும் பட்சத்தில் அவர் விசாரணைக்காக அங்கு செல்ல நேரிடும் என்பதால், அதிலிருந்து சட்ட பாதுகாப்பு வழங்க இயலாது என, பிரிட்டன் அரசு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இதற்கிடையே, வங்கதேச விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் லேமி, ''ஹசீனா தன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளார். ஹசீனாவுக்கு வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்திலும் குடும்ப உறுப்பினர்கள் இருப்பதாகவும், அதனால் அங்கு செல்ல ஆலோசித்ததாகவும் தெரிகிறது,'' என, குறிப்பிட்டார்.லண்டன் பயணத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பெலாரஸ், கத்தார், சவுதி அரேபியா ஆகியவற்றில் ஏதாவது ஒரு நாட்டிற்கு செல்வது குறித்தும் ஹசீனா பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.



பார்லிமென்ட்டில் அறிக்கை தாக்கல்

பார்லிமென்ட் இரு சபைகளிலும் அறிக்கை தாக்கல் செய்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:வங்கதேசத்தில் கடந்த ஜனவரியில் நடந்த தேர்தலுக்கு பிறகே, அரசியல் ரீதியிலான அணி சேர்தலும், பதற்றமும், பிளவுகளும் உருவாகத் துவங்கின. இந்த அடிப்படையில்தான் ஜூனில் மாணவர் போராட்டம் துவங்கியது.ஜூலை மாதம் வரை தொடர்ந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதை பேசி தீர்க்கும்படி இந்தியா சார்பிலும் கேட்டுக் கொள்ளப்பட்டது.ஜூலை 21ல், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து பிரச்னை தீவிரமடைந்தது. பிரதமர் ஹசீனா பதவி விலக வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் ஒரே கோரிக்கையாக மாறியது. ஆகஸ்ட் 4ல், நிலைமை கை மீறிச் சென்றன. அரசு கட்டடங்கள், போலீஸ் ஸ்டேஷன்கள், போலீசார் மீது தாக்குதல் தீவிரம் அடைந்தன. சிறுபான்மையினரின் தொழில் கூடங்களும், கோவில்களும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.இந்த தாக்குதலின் முழு விபரங்களும் தெரியவில்லை. கடந்த 5ம் தேதி போராட்டக்காரர்கள், டாக்காவில் குவிந்தனர். ஊரடங்கு அமலில் இருந்த நிலையிலும், ராணுவ அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியதாக தெரிகிறது. அப்போது பிரதமர் பதவி யிலிருந்து ஷேக் ஹசீனா விலக வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது.அவர் பதவி விலக மிகக் குறைந்த கால அவகாசமே அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவர் தன் முடிவை எடுத்ததும் இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு அது மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.இதையடுத்து, இந்தியாவுக்கு ஹசீனா பயணம் மேற்கொள்ளவிருந்த விமானத்திற்கான அனுமதியை வங்கதேச அதிகாரிகள் கேட்டனர். நேற்று முன்தினம் மாலை, ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். வங்கதேசத்தில் உள்ள, இந்திய துணைத் தூதரக அலுவலகங்களுக்கு போதிய பாதுகாப்பை, அந்நாட்டு அரசு அரசு வழங்கும் என நம்புகிறோம். அங்கு நிலைமைகள் சீரானவுடன் அரசு நிர்வாகமும் சீரடையும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.



'பின்னணியில் சீனா - பாக்., உண்டா?'

அனைத்துக் கட்சி கூட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், மூன்று கேள்விகளை எழுப்பினார்.''வங்கதேசத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுடனான நம் உறவில் நீண்டகால மற்றும் குறுகிய கால திட்டங்களை அரசு வகுத்துள்ளதா,'' எனக் கேட்டார்.அதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ''தற்போதைக்கு இது குறித்து கருத்து சொல்ல முடியாத நிலை. காரணம் அங்கு நிலைமை வேகமாக அடுத்தடுத்து மாறிக்கொண்டே வருகின்றன. அவை அனைத்தையும் அரசு ஆய்வு செய்து வருகிறது. அடுத்தடுத்த நகர்வுகளை வைத்தே வரும் நாட்களில் நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டியது வரும்,'' என்றார்.அடுத்த கேள்வியாக, ''இந்த திடீர் கிளர்ச்சியின் பின்னணியில், சீனா, பாகிஸ்தான் போன்ற வெளிநாட்டு சக்திகள் இருக்கிறதா,'' என, ராகுல் கேட்டார். அதற்கு, ''அந்த கோணத்திலும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. காரணம், பாகிஸ்தானை சேர்ந்த வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர், தன் சமூக வலை தளத்தில் வங்கதேச வன்முறை போராட்டங்கள் குறித்த வீடியோக்களையும், படங்களையும் அடிக்கடி மாற்றிக்கொண்டு வந்ததை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. எனவே, வெளிநாடுகளின் சதி குறித்தும் மத்திய அரசு ஆராயும்,'' என்றார்.மூன்றாவது கேள்வியாக, ''புரட்சி வெடிக்கப் போகிறது என்பதை மத்திய அரசால் முன்கூட்டியே கணிக்க முடிந்ததா,'' என ராகுல் கேட்டார்.அதற்கு, ''அங்கு தொடர்ச்சியாக நடந்து வரும் நிகழ்வுகளை இந்தியா தற்போது வரை கவனித்து வருகிறது,'' என, ஜெய்சங்கர் பதிலளித்தார்.இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக ராகுல் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் உறுதி அளித்தனர்.இந்த கூட்டம் முடிந்ததும், அமைச்சர் ஜெய்சங்கர், சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில், 'வங்கதேச நிகழ்வுகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் விரிவாக விளக்கப்பட்டது. அதை சரியான வகையில் புரிந்து கொண்டு அனைவரும் ஒருமனதாக மத்திய அரசுக்கு ஆதரவு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது' என, குறிப்பிட்டுள்ளார்.



- நமது டில்லி நிருபர் -






      Dinamalar
      Follow us