மசோதாக்களுக்கு ஹிந்தியில் பெயர் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
மசோதாக்களுக்கு ஹிந்தியில் பெயர் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ADDED : டிச 06, 2024 12:10 AM

புதுடில்லி, டிச. 6-
புதிய சட்டங்கள் மற்றும் மசோதாக்களுக்கு முழுமையாக ஹிந்தியில் பெயர் வைக்கப்படுவதற்கு, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் நேற்று எதிர்ப்பு தெரிவித்தன. ஹிந்தி திணிப்பு என்ற அவர்களுடைய வாதத்தை மறுத்துள்ள பா.ஜ., காலனியாதிக்க மனநிலையிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்று கூறியுள்ளது.
கடந்த 90 ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும், இந்திய விமானங்கள் சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. விமானத் துறையில் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பது, தொழில் செய்வதை எளிமையாக்கும் நோக்கத்தோடு பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
திணிக்க வேண்டாம்
இதற்கான மசோதாவை, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு, ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்தார். 'பாரதிய வாயுயான் விதேயக்' என்ற பெயரிலான இந்த மசோதாவுக்கு, திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
“ஏன் அனைத்து சட்டங்களுக்கும் ஹிந்தியிலேயே பெயர் வைக்கப்படுகின்றன. லோக்சபா தேர்தல் முடிவுகள், பன்முகத்தன்மை, கூட்டாட்சி தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளன. ஆனால், மத்திய அரசு ஹிந்திமயமாக்கி வருகிறது. இது ஹிந்தி திணிப்பு,” என, திரிணமுல் காங்.,கின் சாகரிகா கோஷ் கூறினார்.
“ஹிந்தி பேசாத மக்கள் மீது ஹிந்தியை திணிக்காதீர்கள். எந்த ஒரு மசோதாவுக்கும் ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்தில் பெயர் வைக்க வேண்டாம். உடனடியாக இந்த மசோதாவின் பெயரை ஆங்கிலத்துக்கு மாற்றவும்,” என, தி.மு.க.,வின் கனிமொழி சோமு கூறினார்.
அரசியலமைப்பு
ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியின் நிரஞ்சன் ரெட்டி கூறுகையில், “இந்த மசோதாவுக்கான பெயரை மாற்ற வேண்டும். ஹிந்தி திணிப்பு என்பதற்காக கூறவில்லை. சட்டம் முழுதும் ஆங்கிலத்தில் உள்ளது.
சட்டத்தின் பெயர் மட்டும் ஹிந்தியில் உள்ளது. இது, அரசியலமைப்பு தேவையை நிறைவேற்றுவதாக இல்லை. சட்டத்தை ஹிந்தியில் மொழிபெயர்க்கும்போது, தலைப்பில் இருந்து அனைத்தும் ஹிந்தியில் இருக்கலாம்,” என, குறிப்பிட்டார்.
இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.,வின் கியான்ஷியாம் திவாரி, “இது ஹிந்தி திணிப்பு அல்ல. மசோதாவை தாக்கல் செய்தவர், தெலுங்கு பேசும் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
“அரசியலமைப்பு நடைமுறைகளின்படியே, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இன்னும் காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து விடுபடவில்லை,” என கூறினார்.
இதையடுத்து, இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு வாயிலாக ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.