l முதல்வர் சித்துவுக்கு எதிர்க்கட்சியினர்... நெருக்கடி!
l முதல்வர் சித்துவுக்கு எதிர்க்கட்சியினர்... நெருக்கடி!
ADDED : ஜூலை 11, 2024 04:45 AM
பெங்களூரு :   மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு  உத்தரவிடும்படி, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு  எதிர்க்கட்சியான பா.ஜ., நெருக்கடி கொடுக்கிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி,  மைசூரில் பா.ஜ., பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
மூடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையம், வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்ததில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளது, சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. குறிப்பாக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் பெயரில், பல வீட்டுமனைகள் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குற்றச்சாட்டு
சொந்த மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது மட்டுமின்றி, தன் மனைவி பெயரிலான மனை ஒதுக்கீடு வெளிச்சத்துக்கு வந்ததால், முதல்வர் சித்தராமையா கையை பிசைகிறார். 'மூடா' வீட்டுமனை வழங்கியதில், 10,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.
எனவே ஆழமாக விசாரணை நடத்த சி.பி.ஐ.,யிடம் இந்த விவகாரத்தை ஒப்படைக்கும்படி, பா.ஜ., நெருக்கடி கொடுக்கிறது. இல்லையென்றால் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது.
சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில், இவ்விஷயத்தை அஸ்திரமாக பயன்படுத்தி, அரசை திணறடிக்க பா.ஜ., தயாராகி வருகிறது.
வால்மீகி மேம்பாட்டு ஆணையம் மற்றும் 'மூடா'வில் நடந்துள்ள முறைகேடு, சட்டசபை மழைக்காலக் கூட்டத்தொடரில் சூறாவளியை கிளப்பலாம்.
இதுகுறித்து, பெங்களூரில் பா.ஜ., மாநிலத் தலைவர் விஜயேந்திரா நேற்று அளித்த பேட்டி:
'மூடா'வில் நடந்துள்ள முறைகேட்டை கண்டித்து, மைசூரில் இம்மாதம் 12ல் பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்படும். இந்த முறைகேட்டில், முதல்வர் சித்தராமையாவுக்கும் தொடர்பிருப்பது தெரிகிறது. மக்களுக்கு அவர் தவறான தகவல்களை தெரிவிக்கிறார். அவரது முகமூடி கழன்று விழுந்துள்ளது. அவர் பதவியில் நீடிக்க அருகதை இல்லை.
பெருமை பேச்சு
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்துள்ளனர். சொன்னபடி நடந்து கொண்டதாக பெருமை பேசுகிறார். 'மூடா' முறைகேட்டை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைப்பதில், அவருக்கு என்ன பிரச்னை? சித்தராமையா நேர்மையானவராக இருந்தால், சி.பி.ஐ., விசாரணை நடத்த தயங்குவது ஏன்?
எஸ்.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைத்தால், மேம்போக்காக விசாரணை நடத்துவர். முதல்வர் மீது புகார் பதிவு செய்ய, எஸ்.ஐ.டி.,யால் முடியுமா? விசாரணைக்கு ஆஜராகும்படி அவர்களால் நோட்டீஸ் அனுப்ப முடியுமா?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஊழலற்ற ஆட்சி வழங்குவதாக சித்தராமையா வாக்குறுதி அளித்தார். இப்போது தன் மனைவிக்கு, 14 வீட்டுமனைகள் கொடுத்துள்ளார். இதுதான் அவரது ஆட்சித்திறன்.
மனை வழங்குவதில் ஊழல் செய்து, மனை பெற்றுக்கொண்டு, 62 கோடி ரூபாய் நிவாரணம் கேட்ட முதல்வர், நாட்டில் இருக்கிறார் என்றால், அது சித்தராமையாதான்.
கடந்த 2022 ஜனவரி 12ல், கிரயம் செய்யப்பட்டுள்ளது. நிலத்தை விட்டுக் கொடுத்ததற்கு பதிலாக, சட்டப்படி வீட்டுமனை பெற்றுள்ளதாக, முதல்வர் கூறுகிறார். சட்டப்படி பார்த்தால் 4,800 சதுர அடி, 4,060 சதுர அடி கொண்ட இரண்டு மனைகள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இரண்டு மனைகளுக்கு பதிலாக, 14 மனைகள் பெறப்பட்டுள்ளது. இது எப்படி?
நகர வளர்ச்சித்துறை அமைச்சர் பைரதி சுரேஷ். அவசர, அவசரமாக 'மூடா' அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி, அனைத்து அதிகாரிகளையும் இடம் மாற்றம் செய்துள்ளார். எந்த மாவட்ட கலெக்டர், 'மூடா'வில் ஊழல் நடந்துள்ளதாக விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்தாரோ, அந்த கலெக்டரை இடம் மாற்றியுள்ளனர்.
'மூடா'வில் ஆயிரக்கணக்கான மனைகளை, சட்டவிரோதமாக கொடுத்துள்ளனர். நாங்கள் ஆவணங்களுடன், இந்த முறைகேட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.
முதல்வரும், அமைச்சர்களும் மாநில மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். சமூக நியாயம் பற்றி பேசும் முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்களின் சாயம் வெளுத்துள்ளது. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு, மாநில வரலாற்றிலேயே கேட்டறியாத ஊழலாகும். தலித்துகளின் பணத்தை வேறு மாநிலங்களின் தேர்தலுக்கு பயன்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
'மூடா' வழக்கு சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்கப்படாது. பா.ஜ., அரசில் எத்தனை வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு ஒப்படைத்தனர்? விஜயநகரில் மனை தாருங்கள் என, நான் கேட்கவில்லை. இன்றைய சி.பி.ஐ., தலைவரும் கூட, கர்நாடகாவில் பணியாற்றியவர்தான். எங்கள் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தினர். தவறை உணர்ந்து மாற்றுமனைகள் கொடுத்தனர். இதில் என்ன தவறு?
- சித்தராமையா,
முதல்வர்

