இண்டி கூட்டணியில காங்கிரசுக்கு எதிர்ப்பு... வலுக்கிறது!: மம்தா பவாரை தொடர்ந்து ஒமர் விமர்சனம்
இண்டி கூட்டணியில காங்கிரசுக்கு எதிர்ப்பு... வலுக்கிறது!: மம்தா பவாரை தொடர்ந்து ஒமர் விமர்சனம்
UPDATED : டிச 16, 2024 09:34 AM
ADDED : டிச 15, 2024 11:40 PM

புதுடில்லி: ''இண்டி கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தகுதி, தங்கள் உரிமை என, காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. ஆனால், அதை நியாயப்படுத்தவோ, தக்க வைக்கவோ அவர்கள் எதையும் செய்யவில்லை என்ற கருத்து கூட்டணிக்குள் நிலவுகிறது,'' என, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதையடுத்து, மம்தா, சரத் பவாரை தொடர்ந்து, 'இண்டி' கூட்டணிக்குள் காங்கிரசுக்கு எதிரான குரல் வலுக்கத் துவங்கியுள்ளது.
மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை தோல்வியடையச் செய்யும் நோக்கத்துடன், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, 'இண்டி' கூட்டணியை உருவாக்கின. இதற்காக, காங்கிரஸ் தலைமையில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் கைகோர்த்தன.
லோக்சபா தேர்தலில், பல்வேறு கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கிய இந்த கூட்டணி, 234 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனாலும், தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைப்பதை அவர்களால் தடுக்க முடியவில்லை. அதுவரை எல்லாம் சரியாகவே இருந்தது.
தோல்வி
சமீபத்தில் நடந்த ஹரியானா, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், இண்டி கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதன் பின், கூட்டணிக்குள் உரசல்கள் எழத்துவங்கின.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் கூறினர்; மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.
இந்த நேரத்தில் தான், இண்டி கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி மீது, கூட்டணி தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்த துவங்கினர். 'இண்டி கூட்டணியை நான் உருவாக்கினேன். இப்போது தலைமை வகிப்பவர்கள் அதை திறமையாக வழிநடத்த வேண்டும்.
'அவர்களால் முடியவில்லை எனில், நான் தலைமை ஏற்று நடத்த தயாராக உள்ளேன்' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சமீபத்தில் தெரிவித்தார்.
மம்தா கொளுத்திப்போட்ட திரி, மளமளவென பற்றிக்கொண்டது. 'கூட்டணிக்கு தலைமை ஏற்கும் தகுதி மம்தாவுக்கு உள்ளது' என, தேசியவாத காங்., - சரத் சந்திரபவார் பிரிவின் தலைவர் சரத் பவார் வாய் திறந்தார்.
அதையே, சிவசேனா - உத்தவ் பிரிவின் எம்.பி., சஞ்சய் ராவத் வழிமொழிந்தார். இது, இண்டி கூட்டணிக்குள் சலசலப்பை அதிகரித்தது.
இந்த நேரத்தில், இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜம்மு - காஷ்மீர் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான ஒமர் அப்துல்லா, எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றிஉள்ளார்.
பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
பார்லிமென்டின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சித் தலைவர்களை வைத்துள்ள கட்சி என்ற அடிப்படையில், கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்கிறது.
தேசிய அளவில் காங்கிரஸ் அளவுக்கு அதன் கூட்டணி கட்சிகள் கால்பதிக்கவில்லை என்பதும் உண்மை தான். ஆனாலும், காங்கிரஸ் தலைமை மீது கூட்டணி கட்சிகளுக்கு ஒருவிதமான அதிருப்தி நிலவுகிறது.
சிந்திக்க வேண்டும்
இண்டி கூட்டணிக்கு தலைமை ஏற்கும் தகுதியை நியாயப்படுத்தவோ, அதை தக்க வைக்கவோ அந்த கட்சி எதையும் செய்யவில்லை. இது குறித்து காங்., தலைமை சிந்திக்க வேண்டிய நேரமிது.
தேர்தல் நேரத்தில் மட்டும் இண்டி கூட்டணி தலைவர்கள் கூடிப்பேசுவதால் எந்த பயனும் இல்லை. தேர்தலை தாண்டி கூட்டணிக்குள் ஒருஇணக்கம் உருவாக வேண்டும். லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன், நாம் கடைசியாக சந்தித்துப் பேசினோம். அதன் பின் எவ்வித சந்திப்பும் நிகழவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின் தான், காங்கிரஸ் மீதான நேரடி தாக்குதலை ஒமர் துவக்கினார். மீண்டும் ஓட்டு சீட்டு முறை வேண்டும் என்ற காங்கிரசின் கோரிக்கை குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ''அதே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை வைத்து நடத்தப்பட்ட லோக்சபா தேர்தலில் நுாற்றுக்கணக்கான எம்.பி.,க்களை பெற்றபோது, அதை மகிழ்ச்சியாக கொண்டாடினீர்கள். சில மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் தோற்றவுடன், இயந்திரத்தின் மீது பழியை போடுகிறீர்கள்.
''ஓட்டுப்பதிவு நடைமுறையில் நம்பிக்கை இல்லாத கட்சி, தேர்தலில் போட்டியிடவே கூடாது. இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லையெனில் அந்த குற்றச்சாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்,'' என்றார்.
''உங்கள் பேச்சு, பா.ஜ., செய்தி தொடர்பாளர் போல் உள்ளதே,'' என, நிருபர் கேட்டதும், ''நான் சரியாக தான் பேசுகிறேன். கட்சி விசுவாசத்துடன் இல்லாமல் கொள்கையின் அடிப்படையில் பேசுகிறேன்,'' என்றார்.
இதோடு நிற்காமல், ''மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என தெரியாது. டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டப்பட்டது மிகவும் சிறப்பான திட்டம்,'' என்றார்.
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலின் போது பிரசாரத்தில் காங்கிரஸ் ஒத்துழைப்பு தரவில்லை என தேசிய மாநாட்டு கட்சிக்கு அதிருப்தி இருப்பதாக செய்திகள் வெளியானது.
கடுமையான போட்டி நிறைந்த தொகுதிகளை தேசிய மாநாட்டு கட்சிக்கு காங்., தள்ளிவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனாலும், 42 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது.