ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வலுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு!: தேவகவுடாவுக்கு ம.ஜ.த., - எம்.எல்.ஏ., பரபரப்பு கடிதம்
ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வலுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு!: தேவகவுடாவுக்கு ம.ஜ.த., - எம்.எல்.ஏ., பரபரப்பு கடிதம்
ADDED : ஏப் 30, 2024 07:41 AM

பெங்களூரு: ஆபாச வீடியோ வழக்கில் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு, கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவரை கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும் என்று, தேவகவுடாவுக்கு, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர், பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார்.
ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். சில பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், கடந்த 23ம் தேதி சமூக வலைதளங்களில் பரவின. ஆனால், வீடியோக்களில் பிரஜ்வல் முகம் சரியாக தெரியவில்லை.
இதுகுறித்து விசாரிக்கும்படி கர்நாடக மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.
சி.ஐ.டி., - ஏ.டி.ஜி.பி., பிரிஜேஷ்குமார் சிங், ஐ.பி.எஸ்., பெண் அதிகாரிகள் சீமா லட்கர், சுமன் பன்னேகர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவும், அவரது தந்தை ரேவண்ணாவும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அவரது வீட்டில் வேலை செய்த 47 வயது பெண், நேற்று முன்தினம் ஹொளேநரசிபுரா போலீசில் புகார் செய்தார்.
இதன்படி தந்தை, மகன் மீது வழக்கு பதிவானது. இதற்கிடையில் பிரஜ்வல் ஜெர்மனிக்கு சென்று விட்டார். பிரஜ்வலை கைது செய்யக்கோரி, கர்நாடக மகிளா காங்கிரசார் போராட்டமும் நடத்தி இருந்தனர்.
எங்கும் ஓடவில்லை
இந்நிலையில் ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் அளித்த பெண்ணின் உறவினர்கள் சிலர், ஹாசனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அவர்கள் கூறுகையில், 'ரேவண்ணாவும், பிரஜ்வலும் நல்லவர்கள். ரேவண்ணாவின் மனைவி பவானி நிறைய உதவிகள் செய்பவர். புகார் கொடுத்த பெண்ணும், பவானியிடம் உதவி பெற்று உள்ளார். ஆனால் அதை மறந்து ரேவண்ணா, பிரஜ்வல் மீது புகார் அளித்துள்ளார். இதன் பின்னணியில் யாரோ உள்ளனர்' என்று கூறினர்.
ரேவண்ணா நேற்று அளித்த பேட்டியில், ''நாங்கள் எங்கும் ஓடி போகவில்லை. இங்கு தான் இருக்கிறோம். தேவகவுடா குடும்பத்தின் மீது, தேவையில்லாத குற்றச்சாட்டு வருவது புதிது இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலே, எங்கள் குடும்பத்திற்கு தொல்லை கொடுக்கின்றனர். ஜெர்மனி செல்ல வேண்டும் என்று, பிரஜ்வல் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அவரை விசாரணைக்கு அழைத்தால் கண்டிப்பாக ஆஜர் ஆவார்,'' என்றார்.
5 பெண்களிடம் விசாரணை
இதற்கிடையில், 'வீடியோவில் இருப்பது பிரஜ்வலின் முகம் இல்லை. டீப் பேக் மூலம் வீடியோ உருவாக்கி உள்ளனர்' என்று, ம.ஜ.த.,வினர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி கூறுகையில், ''பிரஜ்வல் மீதான வழக்கு குறித்து விசாரிக்க, மாநில அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து உள்ளது. அந்த குழுவினர் டீப்பேக் வீடியோவா என்று ஆய்வு செய்வர்,'' என்றார்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவின் அடிப்படையில், விசாரணை அதிகாரி சீமா லட்கர், ஐந்து பெண்களை நேற்று விசாரணைக்கு அழைத்தார். அவர்களும் விசாரணைக்கு ஆஜராகினர். ரகசிய இடத்தில் வைத்து, விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் ஆபாச வீடியோ பிரச்னையில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு, கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. யாத்கிர் குருமிட்கல் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர், தேவகவுடாவுக்கு எழுதிய கடிதம்:
சில நாட்களாக மாநிலம் முழுதும், பிரஜ்வல் ரேவண்ணா பெயரில் பரவி வரும் ஆபாச வீடியோவால் கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்பட்டு உள்ளது. மேலோட்டமாக பார்த்தால் பிரஜ்வல் தவறு செய்து இருப்பார் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் அவரை உடனடியாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும். பிரதமராக பதவி ஏற்ற முதல் கன்னடர் என்ற பெருமை, உங்களுக்கு உள்ளது.
பெண் ஒருவர் தலையில் புல்லுக்கட்டு சுமந்து செல்வது தான், நமது கட்சியின் சின்னம். இது பெண்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் மரியாதையை பிரதிபலிக்கிறது. உண்மையை கண்டறிய கட்சிக்குள் குழு அமைக்க வேண்டும். மூத்தவரான உங்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு, நான் பெரியவன் இல்லை. ஆனாலும், என் மனதில் பட்டதை கடிதமாக எழுதி உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பரிதாப நிலை
கோலார், முல்பாகல் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சம்ருத்தி மஞ்சுநாத், 'எக்ஸ்' வலைதள பதிவு:
பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் 19 பேரையும் விமர்சித்து சிலர் பேசுகின்றனர். இதனால் 19 எம்.எல்.ஏ.,க்களா அல்லது பிரஜ்வலா என்பதை, கட்சி தலைவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்பது எனது கோரிக்கை. ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி, கட்சியின் கொள்கையை காப்பாற்றுவதன் மூலம், எங்களை தர்மசங்கடத்தில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கேட்டு கொள்கிறேன்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் சாதாரண தொண்டர்களை பற்றி நினைத்து பாருங்கள். தேவகவுடா, குமாரசாமி ஆகியோர், சரியான முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது. எம்.எல்.ஏ.,வாக இருக்கும் நான், ஊடகத்தினர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத, பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன்.
இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.
நிலைப்பாடு என்ன?
இது குறித்து, கட்சியின் மாநில தலைவரான குமாரசாமி அளித்த பேட்டியில், ''தவறு செய்தது யாராக இருந்தாலும், தண்டனை அனுபவிக்க வேண்டும். ரேவண்ணா குடும்பம் ஹாசனில் உள்ளது. நாங்கள் பெங்களூரில் உள்ளோம். பிரஜ்வலை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று, கட்சியில் சில தலைவர்கள் கூறுகின்றனர். ஹூப்பள்ளியில் இன்று எங்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடக்கிறது. பிரஜ்வலை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவு எடுப்போம். ஒருவர் செய்த தவறுக்காக, கட்சியை குறை சொல்வது சரி இல்லை. இந்த விஷயத்தை காங்கிரசார் பெரிதுபடுத்த பார்க்கின்றனர்,'' என்றார்.
பிரஜ்வல் வழக்கு, காங்கிரசாருக்கு அல்வா கிடைத்தது போல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, பிரஜ்வல் உள்ளார். இந்த வழக்கில் பா.ஜ.,வின் நிலைப்பாடு என்ன என்று, காங்கிரஸ் அமைச்சர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தேசிய மகளிர் காங்கிரஸ் தலைவி லம்பா அல்கா கூறுகையில், ''பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகளில் ஈடுபடும் பா.ஜ.,வினர் பாதுகாக்கப்படுகின்றனர்,'' என்று குற்றம்சாட்டினார்.
பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு, பிரதமர் மோடியை, தேவகவுடா, குமாரசாமி, ரேவண்ணா, பிரஜ்வல் சந்தித்து பேசினர். அந்த புகைப்படத்தை வைத்தும், காங்கிரஸ் அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளது.
பிரஜ்வல் வழக்கில் பிரதமர் மோடியும், பா.ஜ.,வினரும் கருத்து தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்று, காங்கிரஸ் தலைவர்கள், சரமாரி கேள்வி எழுப்பி வருகின்றனர். பிரதமர் மோடி புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

