செந்தில் பாலாஜி வழக்கில் ஆஜரான வக்கீலுக்கு எதிரான உத்தரவு ரத்து
செந்தில் பாலாஜி வழக்கில் ஆஜரான வக்கீலுக்கு எதிரான உத்தரவு ரத்து
ADDED : மே 20, 2025 06:28 AM

போக்குவரத்து துறையில் நடந்த முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் மனுதாரர், எதிர்மனுதாரர் என மாறி மாறி இரு தரப்புக்கும் ஆஜரான வழக்கறிஞருக்கு எதிரான நடவடிக்கையை திரும்ப பெற்றது உச்ச நீதிமன்றம்.
தமிழகத்தில், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் முக்கிய பணிகளை பணம் பெற்றுக் கொண்டு நிரப்பியதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில், அவர் தரப்புக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் என்ற வழக்கறிஞர் ஆஜரானார்.
பாதிக்கப்பட்டவர்கள் தரப்புக்காக 'ஊழலுக்கு எதிரான அமைப்பு' உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், இந்த அமைப்புக்காக, சுப்பிரமணியன் என்ற அதே வழக்கறிஞர் ஆஜரானார்.
இது தொடர்பான வழக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் கோர்ட்டில் எடுத்துரைக்கப்பட்டது. உடனே, வழக்கறிஞர் சுப்பிரமணி மீது, பார் கவுன்சில் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு, நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், 'வழக்கறிஞர் சுப்பிரமணியன், தன்னுடைய தவறுக்கு வருத்தம் தெரிவித்து, முந்தைய உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.
'அதனால் அவருடைய கோரிக்கையை ஏற்று, அவர் மீதான முந்தைய உத்தரவை திரும்ப பெறுகிறோம். கூடவே, இந்த விவகாரத்தில் ஊழலுக்கு எதிரான அமைப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவை மீண்டும் உறுதி செய்கிறோம்' என கூறினர்.
- டில்லி சிறப்பு நிருபர் -