பெட்ரோல் பங்க்குகளில் கன்னடத்தில் விலை பட்டியல் வைக்க உத்தரவு
பெட்ரோல் பங்க்குகளில் கன்னடத்தில் விலை பட்டியல் வைக்க உத்தரவு
ADDED : ஜன 10, 2024 12:39 AM

பெங்களூரு : கர்நாடகாவில் பெட்ரோல் 'பங்க்'களில் விலைப் பட்டியலை, கன்னடத்தில் வைக்க உத்தரவிட்டு உள்ளதாக, மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, பெங்களூரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி:
கர்நாடகாவில் உள்ள பெட்ரோல் 'பங்க்'களில் தினசரி பெட்ரோல், டீசல் விலைப் பலகை ஆங்கிலத்தில் வைக்கப்படுகிறது.
விலைப் பலகையை கன்னடத்திலும் வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனால் பெட்ரோல் 'பங்க்'களில் பெட்ரோல், டீசல் விலைப் பலகையை கன்னடத்தில் வைக்கவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் இரண்டு ஆண்டுகளாக குறைந்து உள்ளது. பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை இரண்டு முறை குறைத்துள்ளார் பிரதமர் மோடி.
புதுடில்லியில் 1984ல் டல்லுாரி சீக்கியர் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, காங்கிரஸ் முதலில் நீதி வழங்க வேண்டும்.
அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் குடும்பத்தினர் காரணம். பாரத் ஜோடோ நியாய யாத்திரையை சாக்காக வைத்து, வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டியவர்கள் இங்கு இருக்கிறார்கள்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைந்த பயனாளிகள், பிரதமர் மோடியை பாராட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கன்னடத்தில் பெயர் பலகை வைக்கக் கோரி போராடிய, கர்நாடகா ரக் ஷன வேதிகே அமைப்பினர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அந்த அமைப்பின் தலைவர் நாராயண கவுடா இன்னொரு வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலைப் பட்டியலை கன்னடத்தில் வைக்க, மத்திய அமைச்சர் உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

