மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு
மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு
ADDED : பிப் 08, 2024 05:33 AM

பெங்களூரு: மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்றவும், கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் மாவட்ட கலெக்டர், குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு, திட்ட கமிஷனர் ஷாலினி ரஜ்னீஷ் உத்தரவிட்டார்.
பெங்களூரில் மேற்கொள்ளப்பட்ட 'கே - 100' சிவில் நீர்வழித்திட்டப் பணிகளை, நேற்று திட்ட கமிஷனர் ஷாலினி ரஜ்னீஷ் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பிறப்பித்த உத்தரவு:
பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கும்பரஹுண்டி அருகே மழைநீர் கால்வாயில் ஓடும் நீரை சுத்திரிக்கும் வகையில், தினமும் 50 லட்சம் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன்கொண்ட மையம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
வில்சன் கார்டன் அருகில் உள்ள கால்வாயை ஒட்டி உள்ள பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாந்தி நகர் பஸ் நிலையம் அருகே உள்ள நீர்வழிப்பாதையில், ஓடும் சாக்கடை நீரைத் தடுக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர், தயானந்த், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர், தலைமை பொறியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதற்கு குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் கங்காதர் கூறுகையில், 'மழைநீர் கால்வாயில் கழிவுநீர் செல்வதைத் தடுக்க, 1.5 கோடி லிட்டரை கையாளும் திறன்கொண்ட, இடைநிலை கழிவுநீரேற்று நிலையம் கட்ட வேண்டும். அதற்கான நிலத்தை கே.எஸ்.ஆர்.டி.சி., ஒப்படைக்கும் பணி நிலுவையில் உள்ளது,'' என்றார்.
கே - 100
கே.ஆர்., மார்க்கெட் முதல் பெல்லந்துார் ஏரி வரையிலான 9.2 கி.மீ., நீளமுள்ள ' கே - 100 என்ற கோரமங்களா மழைநீர் கால்வாய் திட்டம்' 2021 மார்ச் முதல் நடந்து வருகிறது.
இரவு நேரத்தில் தோட்டத்தில் பசுமையாக்கம், அலங்கார விளக்கு, கிரானைட் அமைத்தல், தோட்டம் அமைத்தல், நடைபாதை கிரில் அமைக்கும் பணிகள் வருகின்றன.
கால்வாயின் இருபுறமும் பாலங்கள் கட்டம் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. மின்சாரம் வழங்குவதற்காக, அதிநவீன டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மழைநீர் இருபுறமும் சர்வீஸ் ரோடு மேம்பாட்டு பணி முடிந்து உள்ளது. சர்வீஸ் சாலையில் உள்ள கால்வாயில் மழைநீர் செல்வதை தடுக்க, பைப் லைன் கேபிள் பதிக்கும் அறைகள் அமைக்கும் பணியும் நிறைவடைந்து உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

