ADDED : பிப் 08, 2025 06:25 AM

விஜயநகரா: விஜயநகராவில் முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு நேற்று அளித்த பேட்டி:
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவே, எங்களின் மேலிட தலைவர். அவர் எடுக்கும் முடிவே இறுதியானது. மாநிலத் தலைவரை மாற்றுவதானால், எனக்கு வாய்ப்பு தாருங்கள் என, கட்சி மேலிடத்திடம் வேண்டுகோள் விடுத்தேன்.
கட்சி எடுக்கும் முடிவுக்கு, நான் கட்டுப்படுவேன். கட்சியில் அதிருப்தியில் உள்ள தலைவர்கள், டில்லியில் மேலிடத்துடன் பேசுவர். அனைத்து குழப்பங்களும் விரைவில் சரியாகும் என, நம்புகிறேன். ஜனார்த்தன ரெட்டியும், நானும் மீண்டும் ஒன்று சேர முடியாது. வேறு விஷயங்கள் என்றால், சமரசமாக இருப்போம் என, நினைக்கிறேன்.
மாநிலத்தின் எந்த சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டாலும், நான் வெற்றி பெறுவேன். என்னை காங்கிரசில் சேர்க்க, துணை முதல்வர் சிவகுமார் உட்பட பலர் முயற்சித்தனர்.
ஆனால் நான் தேசிய கட்சியான பா.ஜ.,வில் இருக்கிறேன். வேறு கட்சிக்கு செல்லமாட்டேன்.வரும் நாட்களில் கட்சியை பலப்படுத்தி கட்சியை ஆட்சியில் அமர்த்துவதே, என் குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.