UPDATED : ஏப் 08, 2025 08:05 PM
ADDED : ஏப் 08, 2025 07:31 PM

ஆமதாபாத்: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குஜராத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்டிருந்த நிலையில் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். மன்மோகன் சிங் அமைச்சரவையில் நிதி, உள்துறை அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். தற்போது குஜராத் மாநிலத்தில் நடந்து வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க ஆமதாபாத் சென்றிருந்தார். அவர் சபர்மதி ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை, கட்சி தொண்டர்கள் மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்துள்ளனர். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நலமுடன் இருக்கிறார்
'என் தந்தைக்கு, அதிக வெப்பம் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மயக்கம் ஏற்பட்டது. தற்போது அவர் ஜைடஸ் மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல் நிலை இயல்பாக உள்ளது' என்று சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

