சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்பட்ட பஹல்காம்; பயங்கரவாத தாக்குதலால் வெறிச்சோடியது!
சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்பட்ட பஹல்காம்; பயங்கரவாத தாக்குதலால் வெறிச்சோடியது!
UPDATED : ஏப் 24, 2025 05:37 PM
ADDED : ஏப் 24, 2025 05:32 PM

ஸ்ரீநகர்: சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்பட்ட பஹல்காம், பயங்கரவாத தாக்குதல் நடந்த காரணத்தால் வெறிச்சோடி காணப்படுகிறது. இது சுற்றுலாத்துறைக்கு பேரிழப்பாக அமையும் என தெரிகிறது.
கடந்த 30 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியால் ஜம்மு காஷ்மீர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் 2019ல், மோடி தலைமையில் பா.ஜ 2வது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது.
அதன் பிறகு ஜம்மு காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்தது. மக்களும் சகஜமாக நடமாட தொடங்கினர். இந்த சூழலில் தான், கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.26 சுற்றுலா பயணிகளை பலி வாங்கிய இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரின் ஒட்டுமொத்த இயல்பு நிலையையும் மாற்றிவிட்டது.
பைசரன் பள்ளத்தாக்கு பகுதி, பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இது ஜம்மு காஷ்மீரின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. அமைதியை தேடும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்து செல்கின்றனர். தற்போது சுற்றுலா பயணிகள் வருகையால் கிடைக்கும் வருமானத்தை நம்பி வாழும் பஹல்காம் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.சம்பவம் நடந்த மறுதினமே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வெளியேறியதால் இன்று காலை பஹல்காம் வெறிச்சோடியது. 'சுற்றுலாப் பயணிகள் வெளியேறுவதை பார்ப்பது மன வேதனை அளிக்கிறது' என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.காஷ்மீருக்கான முன்பதிவுகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டிராவல்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
காஷ்மீர் பயணங்கள் ரத்து செய்யப்படுவது அதிகரிப்பதாகவும், மக்கள் இப்போது ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாற்று இடங்களை தேடுவதாகவும் இந்திய வர்த்தக சபையின் சுபாஷ் கோயல் தெரிவித்தார்.

